Monday, September 3, 2012

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ (ரலி)

காதிஸ்ஸியாப் போரில் பாரசீகப் படைகளின் தளபதி ருஸ்தம் கொல்லப்பட்டதும் அந்தப் போர் ஒரு முடிவிற்கு வந்தது. அந்தப் போரில் பாரசீகப் படைப்பிரிவிற்கு ஜாலினுஸ் (Jalinus), ஹுர்முஸான் (Hormuzan) என்ற இரு முக்கியத் தலைவர்கள் இருந்தனர். போரின் இறுதியில் தப்பித்து ஆற்றைக் கடந்து ஓடிய ஜாலினுஸை, ஸுஹ்ரா இப்னுல்-ஹாவிய்யா (Zuhrah ibn al-Hawiyah) என்பவர் துரத்திச் சென்று பிடித்து, கொன்றொழித்தார். ஆனால், ஹுர்முஸான் மட்டும் தப்பித்துவிட்டான். முஸ்லிம் படைகள் பாரசீகத்திற்குள் முன்னேறிச் சென்று கொண்டேயிருக்க, இதர சிலப் போர்கள் நிகழ்ந்தன. ஓயாத ஒழியாத போர்க்காலம் அது. உமர் ரலியல்லாஹு அன்ஹுவின் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்கள் அவை.  இங்கு நாம் சுருக்கமாய்த் தெரிந்து கொள்ள வேண்டியது - அதிலெல்லாம் பாரசீகர்கள் தோல்வியைத் தழுவ, அந்தந்தப் பகுதிகளும் முஸ்லிம்கள் வசமாகிக் கொண்டேயிருந்தன என்பதை மட்டுமே.


முஸ்லிம் படைகள் முன்னேற முன்னேற, ஹுர்முஸான் மட்டும் ஒவ்வொரு போரிலும் ஓடினான் ஓடினான், தப்பித்து ஓடிக்கொண்டேயிருந்தான். ஒருவழியாய் ரம்ஹொர்முஸ் (Ramhormuz) என்ற நகரை வந்தடைந்து அவன் மேல்மூச்சுக் கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, வேறொரு முனையில் பாரசீகப் பேரரசன் யஸ்தகிர்தை (Yezdagird) அமைச்சர் பிரதானிகளெல்லாம் தவிர பெருங்கவலையொன்று சூழ்ந்திருந்தது. முன்னேறி வரும் முஸ்லிம் படைகளை எப்படியும் தடுத்து நிறுத்திவிட வேண்டும், அவர்களை வென்று பாரசீகத்திலிருந்து விரட்டிவிட வேண்டும், என்ன செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டேயிருந்தவன், “அடுத்தக்கட்டப் போருக்குத் தயாராகுங்கள்!” என்று அறிவித்து விட்டான். ரம்ஹொர்முஸுக்கு அப்போதுதான் வந்து சேர்ந்த ஹுர்முஸான் தலைமையில் பாரசீகப் படைகள் தயாராயின. இதையெல்லாம் ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபா உமருக்குத் தகவல் தெரிவிக்க, மதீனாவிலிருந்து போர்க் கட்டளைகள் விரைந்து வந்தன.

பஸ்ரா நகரிலிருந்து ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையில் ஒரு படையை அனுப்பி வைக்கும்படி அபூமூஸா அல் அஷஅரீக்குக் கட்டளையிடப்பட்டது. அதே நேரத்தில் கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் இப்னு அல்-முகர்ரின் தலைமையில் ஒரு படை புறப்பட வேண்டும். இந்த இருபடைகளும் ரம்ஹொர்முஸ் நோக்கி முன்னேற வேண்டும். இருபடைகளும் ஓர் இடத்தில் இணைந்து, அந்த ஒருங்கிணைந்த படைக்கு அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் (Abu Sabrah ibn Abi Ruhm) தலைமை ஏற்க வேண்டும். இரண்டு படைவீரர்கள் அணி புறப்பட வேண்டிய அளவிற்குப் போரின் ஏற்பாடுகள் இருந்ததென்றால் அதன் தீவிரத்தை நாம் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். 

அதன்படி கூஃபா நகரிலிருந்து அந்நுஃமான் தனது படையுடன் ரம்ஹொர்முஸ் நோக்கிப் புறப்பட்டார்.

இந்தச் செய்திகளையெல்லாம் அறிந்த ஹுர்முஸான் திட்டம் தீட்டினான். பஸ்ரா நகரிலிருந்தும் வரும் படை நுஃமானின் படையுடன் ஒன்றிணைந்துவிட்டால் முஸ்லிம்களது பலம் அதிகமாகிவிடுமே என்று அவனுக்குக் கவலை. நுஃமானின் படையை வழியிலேயே சந்தித்து முறியடித்துவிட்டால்? காரியம் எளிதாகிவிடும்! எனவே அவன் தனது படைகளுடன் நுஃமானின் படையை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றான். அர்பக் (Arbak) எனும் பகுதியில் இரு படைகளும் மூர்க்கமாய் முட்டிக்கொண்டன. கடுமையான யுத்தம் மூண்டது. அந்தப் போரில் நுஃமான் ஹுர்முஸானை வென்றார். போர் தோல்வியில் முடிந்ததும் அங்கிருந்து தப்பித்த ஹுர்முஸான் ரம்ஹொர்முஸுக்குத் திரும்பாமல் தஸ்தர் எனும் நகருக்கு ஓடினான். பின்தொடர்ந்தது நுஃமானின் படை.

இதனிடையே பஸ்ராவிலிருந்து புறப்பட்டு வந்ததே ஸஹ்லிப்னு அதிய்யி தலைமையிலான படை, அது அல்-அஹ்வாஸ் பகுதியை அடைந்தது. அப்பொழுதுதான் அவர்களுக்கு நடந்து முடிந்த போர் நிகழ்வுகள் தெரியவந்தன. ஹுர்முஸான் நுஃமானை எதிர்கொள்ளக் கிளம்பிச் சென்றது தோற்றுப்போய் அவன் தஸ்தருக்கு ஓடியது, தஸ்தரை நோக்கி நுஃமானின் படை பின் தொடர்வது – இவையெல்லாம் அறிந்ததும், “திரும்பு தஸ்தர் நோக்கி” என்று இப்பொழுது இந்தப் படையும் தஸ்தருக்குப் பின்தொடர்ந்தது.
oOo

தஸ்தர்!


பாரசீகப் பேரரசின் மகுடத்தில் இரத்தினக் கல் அந்நகரம்! அருமையான தட்பவெப்ப நிலையும் வலுவான கோட்டைகளும் கொண்ட மிக அழகிய நகரம். பண்டைய காலத்திலேயே கட்டப்பட்ட இந்நகரத்தில் தொன்று தொட்டு மக்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. நாகரீகத்தின் மையமாய் அந்நகரம் அமைந்து இருந்திருக்கிறது. குதிரையின் உடல்போல் அமைந்திருந்த நீண்ட குறுகிய சிறுமலை. அதில் அந்நகரம் கட்டப்பட்டிருந்தது. மலையின் அடிவாரத்தில் துஜயால் (Dujayal) எனும் பள்ளத்தாக்கு. அதுதான் தஸ்தர் நகருக்குத் தண்ணீர் கேந்திரம். அங்கிருந்து நகரிலுள்ள நீர்த்தேக்கத்திற்குக் குழாய் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்லப்படும் வசதி வடிவமைக்கப்பட்டிருந்தது. கற்கள் நெருக்கமாய் வைத்துக் கட்டப்பட்ட சுவர், வலுவான இரும்புத் தூண்களாலான சுவர்தாங்கி, அதில் காரீயத்தால் பூசப்பட்ட குழாய்கள் என்று வடிவமைக்ப்பட்டிருந்தன. எல்லாம் சபூர் பேரரசனின் கட்டுமான சாமர்த்தியம். தஸ்தர் நகரைச் சுற்றிலும் உயரமான பருமனான சுவர் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு நகரைச் சுற்றி அமைக்கப்பட்ட சுவர்களிலேயே இதுதான் முதல் விசாலமான சுவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இந்த தஸ்தர் நகருக்குள் சென்று பாதுகாப்பாக ஒளிந்து கொண்டான் ஹுர்முஸான். வலுவான தடுப்புச் சுவர் உள்ள நகர்தான். அதற்காக அப்படியே இருந்துவிட முடியுமா? நகரின் சுவருக்கு வெளியே ஆழமான அகழியொன்று வெட்ட ஏற்பாடு செய்து, முஸ்லிம்கள் எளிதில் கடக்க இயலாத வகையில் பக்காவாய் அரண் உருவானது. அகழிக்கு அடுத்தத் தடுப்பாகப் பாரசீகத்தின் மிகச் சிறந்த படை வீரர்கள் நிறுத்தப்பட்டனர்.

இவ்விதம் இங்குத் தற்காப்பு தயாராகி முடிந்த வேளையில் வந்து சேர்ந்தன முஸ்லிம்களின் இரு படைகளும். ஒன்றிணைந்த முஸ்லிம் படைகளுக்கு, கலீஃபாவின் கட்டளைப்படி அபூஸப்ரா இப்னு அபி ருஹ்ம் தலைமை ஏற்றுக்கொண்டார். நிலைமையை ஆராய்ந்தவர் எதிரியின் தற்காப்பையும் அரணையும் வலுவையும் கவனித்து கலீஃபா உமருக்குத் தகவல் அனுப்பினார். “கூடுதல் படை வேண்டும்!”

கலீஃபா உமர் ரலியல்லாஹு அன்ஹுவிடமிருந்து பஸ்ராவிலிருந்து அபூமூஸா அல் அஷ்அரீ ரலியல்லாஹு அன்ஹுவுக்குத் தகவல் பறந்தது. “தாங்கள் ஒரு படை திரட்டிக் கிளம்பிச் சென்று தஸ்தரில் தங்கியுள்ள படையுடன் இணைந்து கொள்ளுங்கள். பஸ்ராவின் வீரர்களுக்கு நீங்கள் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அபூஸப்ரா அனைத்துப் படைகளுக்கும் தலைமை வகிக்கட்டும்.”

அதனுடன் சேர்த்து மற்றொரு முக்கியத் தகவலும் இருந்தது. “முக்கியமாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ தங்களது படையில் இடம்பெற வேண்டும்”

தன் ஆளுநர்களை எப்படி தேடித் தேடி நிர்ணயிப்பதில் திறமை இருந்ததோ அதைப்போல் ஒவ்வொரு படைக்கும் தலைமையையும் தகுந்த வீரர்களையும் நிர்ணயிப்பதிலும் உமருக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அந்த திறன்தான் இந்தப் போரில் முஜ்ஸாவை முக்கிய வீரராய் இணைத்துக் கொள்ள உமரின் உள்ளுணர்வைத் தூண்டியது. அது முற்றிலும் சரியே என்பதை நிகழ்வுகள் ஊர்ஜிதப்படுத்துவது பெரும் ஆச்சரியம்! பார்ப்போம்.

முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ ரலியல்லாஹு அன்ஹு, பக்ரு கோத்திரத்தைச் சேர்ந்தவர். நிகரற்ற படைத் தலைவர்; படு துணிவான வீரர்.

கலீஃபா உமரின் கட்டளைப்படி அபூமூஸாவின் படையில் முஜ்ஸா இடப்புறமுள்ள அணியில் இடம்பெற, கிளம்பியது படை.

தஸ்தர் நகரைச் சுற்றிவளைத்த முஸ்லிம் படைகளை அகழியும் வீரர்களின் அரணும் கோட்டையும் படுபாதுகாப்பாய் ஹுர்முஸானை உள்ளே வைத்துப் பொத்திக்கொண்டு வரவேற்றன. நேரடிப் போருக்கு ஏதும் வழியில்லை என்று தெரிந்தது முஸ்லிம்களுக்கு. “கூடாரம் அமையுங்கள். முற்றுகை தொடங்கட்டும்!” என்று கட்டளையிடப்பட, தொடங்கியது முற்றுகை.

ஒருநாள் அல்ல, ஒரு மாதம் அல்ல, ஏறக்குறைய பதினெட்டு மாதங்கள் நீடித்தது இந்த முற்றுகை. முஸ்லிம்களின் பொறுமைக்கும் வீரத்திற்கும் பெரியதொரு சவால் அது!

இந்தப் பதினெட்டு மாதகாலமும் அமைதியாய் ஏதும் கழியவில்லை. பாரசீகப் படைக் குழுக்களுடன் எண்பது சிறு சிறு யுத்தங்கள் நிகழ்ந்தன. இந்தச் சிறுயுத்தம் எப்படி நிகழும் என்றால் ஆரம்பத்தில் “ஒத்தைக்கு ஒத்தை வர்ரியா?“ என்று சண்டை ஆரம்பிக்கும். இரு தரப்பிலிருந்தும் ஒரு முக்கிய வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள். அதில் ஒருவர் கொல்லப்பட, அதற்கு அடுத்து இருதரப்பிற்கும் இடையே கடுமையான சண்டை நிகழ்வுறும்.

இத்தகைய ஒத்தைக்கு ஒத்தை சண்டைகளில் முஸ்லிம்கள் தரப்பில் களமிறங்கியவர் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீ. மட்டை ஆட்டத்தில் நூறு ஓட்டம் எடுப்பதுபோல் நூறு எதிரி வீரர்களை அவர் சர்வசாதாரணமாய்க் கொன்று தள்ள - அதகளம்! முஜ்ஸாவின் பலமும் பராக்கிரமும் எதிரிகளைத் திகைப்படையச் செய்தன. “முஜ்ஸா“ என்ற பெயரே பாரசீகர்கள் மத்தியில் பயத்தைத் தோற்றுவிக்க ஆரம்பித்தது. அதே பெயர் முஸ்லிம்கள் மத்தியில் பெருமையையும் மரியாதையையும் உற்சாகத்தையும் அதிகப்படுத்தியது. ரலியல்லாஹு அன்ஹு.

இந்தப் போருக்குமுன் முஜ்ஸாவை அதிகம்பேர் அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது அவரது வீரத்தைக் கண்டபிறகுதான் முஸ்லிம்களுக்கு அது புரிந்தது, கலீஃபா உமர் ஏன் மிகக் குறிப்பாய் முஜ்ஸஅதிப்னி ஃதவ்ரைப் போரில் இணைத்துக் கொள்ள கட்டளை அனுப்பினார் என்று.

எண்பது சிறு சிறு யுத்தங்கள் நடைபெற்றதல்லவா? அவை அனைத்திலும் முஸ்லிம்களின் தாக்குதல் மிகக் கடுமையானதாக இருந்தது. அகழிக்குமேல் அமைந்திருந்த பாலங்களை விட்டுவிட்டு, கோட்டைச் சுவர்களுக்கு பின்னால் ஓடி மறைந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது எதிரிகளுக்கு.

ஆனால் அதேநேரத்தில் அவ்வளவு நீண்டகால முற்றுகை முஸ்லிம்கள் மத்தியில் பெரும் அயர்வையும் சோர்வையும் ஏற்படுத்தியிருந்ததும் உண்மை. முஸ்லிம்களுக்கு அசாத்தியப் பொறுமை இருந்ததென்றாலும் ஒவ்வொரு நாளும் உல்லாசமாகவா கழிந்தது? நகரின் உயர்ந்தோங்கிய சுவர்களுக்குப் பின்புறமிருந்து பாரசீகர்கள் முஸ்லிம்களின்மேல் அம்பு மழை பொழிந்து கொண்டிருந்தனர். அதில் முஸ்லிம்களுக்கு உயிரிழப்பும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. தவிரவும் பாரசீகர்கள் கடைப்பிடித்த மற்றொரு யுக்தி முஸ்லிம்களுக்கு பெரும் சோதனை.

பெரிய பெரிய கொக்கிகளை சிவந்துவிடும் அளவிற்கு மட்டும் நெருப்பில் சுட்டுக் கொள்வார்கள். அதை இரும்புச் சங்கிலிகளில் இணைத்துவிட சுவர்களின் மேலிருந்து கீழிறங்கும் அக்கொக்கிகள். முஸ்லிம் வீரர்கள் சுவரை ஏறிக் கடக்கவோ சுவரை அண்மவோ நெருங்கும்போது அந்த நெருப்புக் கொக்கிகளை அவர்கள்மேல் மாட்டி, கட்டி இழுக்க... என்னாகும்? சகிக்கவியலாத வேதனையுடன் தசை பொசுங்கி முஸ்லிம்கள் உயிரிழிக்க நேர்ந்தது.

போரும் பொறுமையும் தொழுகையும் பிரார்த்தனையுமாக முற்றுகை நீடித்துக் கொண்டிருந்தது. இறைவனிடம் முஸ்லிம்கள் கையேந்த ஒருநாள் அந்த விசித்திரம் நிகழ்ந்தது. உதவி புரிவோருள் எல்லாம் சிறந்த உதவி புரிவோன் அவன்தானே?

உடைக்க இயலாத பெரும் அரணாய் நின்று கொண்டிருந்த தஸ்தரின் அந்த நெடிய சுவரை ஒருநாள் அபூமூஸா கூர்ந்து பார்வையிட்டுக் கொண்டேயிருந்தார். எங்காவது, ஏதாவது ஒருவழி தென்படாதா என்று கவலையுடன் சுற்றிவர, விண்ணிலிருந்து வந்து விழுந்தது ஓர் அம்பு. அதன் நுனியில் செய்தி ஒன்று!

பிரித்துப் படித்தால், “முஸ்லிம்களை நம்பலாம் என்று எனக்கு உறுதியாகிவிட்டது. எனக்கும் என் குடும்பத்தினருக்கும் என்னைச் சேர்ந்த சிலருக்கும் நீங்கள் அபயம் அளிக்க வேண்டும். எனது உடமைகளுக்கு நீங்கள் பாதுகாவல் அளிக்கவேண்டும். அதற்கு என்னுடைய கைம்மாறு உண்டு. நகருக்குள் ஊடுருவும் ஓர் இரகசியப் பாதை எனக்குத் தெரியும். அதை நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்”

பாரசீக ஆட்சியில் சிக்குண்டிருந்த மக்கள், பாரசீகர்கள்மேல் பாசம், அபிமானம் ஆகியனவெல்லாம் கொண்டவர்களாய் இருக்கவில்லை. மாறாய் அந்த அரசின் கொடுங்கோல் ஆட்சி அவர்களுக்குத் தாங்கமாட்டாத தொல்லை. உழுபவன் சில்லறை எண்ணிக் கொண்டிருக்க, அதிகாரத்தில் உள்ளோர் மூட்டை மூட்டையாக அதன் பலனை அனுபவித்துக் கொண்டிருந்தனர். “ஆமாம், இப்பொழுதுவரை நம் நாட்டில் மட்டும் என்ன வாழ்கிறது?” என்று நமக்கு அலுப்பு ஏற்படலாம். அது வேறு விஷயம்.

பாரசீக மன்னர்களிடம் சிக்குண்டிருந்த அந்த மக்களுக்கு முஸ்லிம்களின் நேர்மையும் வாய்மையும் இறை விசுவாசமும் அவர்கள் கற்பனைகூட செய்திராத ஆச்சரியமாய் அவர்கள் கண்ணெதிரே விரிந்தன. அது தஸ்தர் நகரின் வலுவான அரணின் அஸ்திவாரத்தை அசைக்க ஆரம்பித்தது.

செய்தியைப் படித்த அபூமூஸா அவர்களுடைய பாதுகாவலுக்கு உறுதிமொழி அளிக்கும் பதிலொன்றை உடனே எழுதி, அதை ஓர் அம்பில் கட்டி உள்ளே எய்தார். அம்பஞ்சல் வேலை செய்தது. அன்றைய இரவின் இருட்டில் யாருக்கும் தெரியாமல் அந்த மனிதன் நகருக்கு வெளியே வந்து அபூமூஸாவைச் சந்தித்தான்.

“நாங்கள் உயர்குடியைச் சேர்ந்த மக்கள். ஆனால் ஹுர்முஸான் என் அண்ணனை அநியாயமாகக் கொலை செய்துவிட்டு என் அண்ணனின் குடும்பத்தையும் உடமைகளையும் தனதாக்கிக் கொண்டான். இப்பொழுது அவனுக்கு என்மேல் கடுமையான கடுப்பு. அவனிடமிருந்து எந்த நொடியும் ஆபத்து வரலாம் என்ற பயத்திலேயே நானும் என் குடும்பமும் உள்ளோம். அவனது அநீதியை மிகக் கடுமையாய் வெறுக்கிறோம். முஸ்லிம்களான உங்களது நேர்மை எங்களுக்கு மிகவும் உவப்பானதாய் இருக்கிறது. அவனது துரோகத்தைவிட உங்களது வாய்மை மகா மேன்மை. தஸ்தர் நகரினுள் ஊடுருவும் ரகசியப் பாதை ஒன்றை உங்களுக்குக் காட்ட நான் முடிவெடுத்துவிட்டேன். அதன் வழியே நீங்கள் நகருக்குள் புகுந்துவிட முடியும். உங்களுள் சிறந்த வீரரும் மதிநுட்பம் வாய்ந்தவரும் நன்றாக நீச்சல் அறிந்தவருமான ஒருவரை என்னுடன் அனுப்புங்கள். நான் அவருக்கு வழி காண்பிக்கிறேன்”

அந்தப் பாரசீக நாட்டுக் குடிமகன் பேசியதில் நமக்கு எண்ணற்றப் பாடங்கள் உள்ளன. முஸ்லிம்களுக்கு அடிப்படைத் தகுதிகளாய் இருக்க வேண்டியதில் மிக முக்கியமானவை உறுதியான இறைநம்பிக்கையும் எத்துணைப் பெரிய சோதனை வந்தாலும் அதைத் தாங்கிக் கொள்ளும் மனத்திடமும்தாம். அவை அவர்களிடம் இருந்தன. ஈருலுகிலும் வென்றார்கள்! அவற்றிலிருந்து நாம் அந்நியப்பட்டுக் கிடந்தால், எதை நொந்து என்ன பயன்?

அபூமூஸா, முஜ்ஸாவை தனியே அழைத்துப் பேசினார். பதினெட்டு மாதகாலப் பொறுமைக்குப் பயனாய் திடீரென ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றத்தை விவரித்து, “உமது குழுவிலிருந்து அந்த மனிதன் கேட்கும் தகுதியுடைய ஒருவரை எனக்குத் தந்து உதவவும்”

“வேறொருவர் எதற்கு? நானே செல்கிறேனே! தாங்கள் அனுமதியுங்கள்”

யோசித்தார் அபூமூஸா. “அதுதான் உமது விருப்பமெனில், நீரே செல்லவும். அல்லாஹ்வின் அருள் உமக்குண்டு”

அடுத்து முக்கிய ஆலோசனைகளை அவருக்கு வழங்கினார் அபூமூஸா. “கவனமாய்ப் பாதையை மனதில் குறித்துக் கொள்ளுங்கள். நகரின் வாயில் எங்கு அமைந்திருக்கிறது என்பதை அறிய வேண்டியது முக்கியம். ஹுர்முஸான் எப்படி இருப்பான், எங்கு இருக்கிறான் என்பதை அறிய வேண்டும். அடுத்து இந்தப் பணியில் மிகவும் கவனம் தேவை. யாருக்கும் எந்த சந்தேகமும் ஏற்படாமல் காரியமாற்றித் திரும்ப வேண்டும்”

எதிரியின் கோட்டைக்குள் ஊடுருவுவது என்பார்களே, இது உண்மையிலேயே அந்தப் பணிதான். கரணம் தப்பினால் மரணம் என்பதுபோல் உள்ளே சிறு சந்தேகம் ஏற்பட்டாலும் அடுத்தநொடி சென்றவர் தலை அவருக்கு சொந்தமில்லை.

“அப்படியே ஆகட்டும்” என்று கூறிவிட்டு இரவின் இருளில் அந்தப் பாரசீக மனிதனுடன் கிளம்பினார் முஜ்ஸா.

மலையைக் குடைந்து அமைத்த சுரங்கவழி ஒன்று இருந்தது. அது தஸ்தர் நகரையும் ஆறு ஒன்றையும் இணைத்தது. அதன் வழியே தொடங்கியது பயணம். சில இடங்களில் அந்தச் சுரங்கவழி அகலமாய் இருக்க நீரினுள் நடந்தே செல்ல முடிந்தது. வேறு சில இடங்களில் மிகக் குறுகலாய் நீந்தி மட்டுமே செல்ல வேண்டிய நிலை. சில இடங்கள் வளைந்து நெளிந்து இருந்தன. நெடுஞ்சாலையிலிருந்து கிளைச் சாலைகள் பிரிவதைபோல் அங்கெல்லாம் இவர்கள் சென்று கொண்டிருந்த சுரங்கவழிப் பாதையிலிருந்து கிளைகள் பிரிந்திருந்தன. வேறு சில இடங்களில் வெகு நேராய் எளிதாய்க் கடக்கும் வகையில் அமைந்திருந்தது பாதை.

மெதுமெதுவே முன்னேறிச் சென்று கொண்டிருந்தார்கள் முஜ்ஸாவும் அந்த மனிதனும். ஒருவழியாய் சுரங்கப்பாதை தஸ்தர் நகரினுள் வந்து முடிய, நகருக்குள் அடியெடுத்து வைத்தார் முஜ்ஸா. தேர்ந்த சுற்றுலா வழிகாட்டிபோல் ரகசியமாய் முஜ்ஸாவை நகரினுள் கூட்டிவந்த அந்தப் பாரசீக மனிதன், ஹுர்முஸான் இருக்கும் இடத்திற்கு அருகில் அழைத்துச் சென்று மிகத் தெளிவாக அடையாளம் காட்டினான். “அதோ அவன்தான் ஹுர்முஸான். இதுதான் அவன் இருக்கும் இடம், நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்,” என்று தெரிவித்துவிட்டான்.

அவ்வளவு நெருக்கத்தில், கை நீட்டி எளிதாய்ப் பறித்துவிடும் தூரத்தில் எதிரியைக் கண்டதும் முஜ்ஸாவிற்கு கைகாலெல்லாம் பரபரத்தது. ஒரே அம்பு. தீர்ந்தது விஷயம் என்று அவன் ஜோலியை முடித்துவிடலாம்! ஆனால் தலைவரின் கட்டளை அந்த நினைவிற்குத் தடையிட, தனது உணர்ச்சிகளையெல்லாம் மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு,  அந்த மனிதனுக்கு நன்றி நவின்றுவிட்டு விடிவதற்குள் வந்து வழியே தனது இருப்பிடத்திற்குத் திரும்பினார் முஜ்ஸா.

அபூமூஸாவைச் சந்தித்து நடந்த அனைத்தையும் விவரிக்க, அடுத்து பரபரவென காரியம் துவங்கியது. சிறப்பான முந்நூறு வீரர்களைத் தேர்ந்தெடுத்தார் அபூமூஸா. பொறுமையிலும் உடல் வலிமையிலும் உளவலிமையிலும் சிறந்தவர்கள் அவர்கள். முக்கியமாய் நீந்துவதில் அவர்களுக்கு அசாத்தியத் திறமை இருந்தது. அவர்களுக்கு முஜ்ஸஅதிப்னி ஃதவ்ர் தலைவர். அந்த கமாண்டோ படைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

“வெற்றிகரமாய் ஊடுருவி நகரின் உள்ளே நுழைந்ததும் ‘அல்லாஹு அக்பர்’ என்று உரத்து ஒலியெழுப்புங்கள். வெளியில் உள்ளவர்களுக்கு அதுவே சங்கேதக் குறியீடு. அதைக் கேட்டதும் வெளியில் உள்ள படை நகரைத் தாக்கத் துவங்கும்.”

பெரியதொரு போருக்கு தயாரானது தஸ்தர்.

தம் வீரர்களை இயன்றவரை குறைவான ஆடைகள் உடுத்தி்க் கொள்ளச் சொன்னார் முஜ்ஸா. நீரில் துணி கணத்தால் எப்படிச் சுளுவாய் நீந்துவது? தவிர, வாளைத் தவிர வேறு எந்த ஆயுதமும் எடுத்துக் கொள்ளக் கூடாது; அந்த வாளையும் ஆடையினூடே மறைத்து உடம்பினுள் கட்டிக் கொள்ள வேண்டும்.



oOo

அடுத்த நாள் -


முன்னிரவில் கிளம்பியது அந்தப் படை.

மிகவும் கடினமான, ஆபத்தான அந்த சுரங்கவழியை சில மணி நேரங்கள் போராடிக் கடந்தனர் அவர்கள். நகரினுள் முடிந்த அந்த சுரங்க வாயிலை அடையும்போது இருநூற்று இருபது வீரர்கள் அந்தக் கொடிய பயணத்தில் இறந்துவிட்டதை அறிந்தார் முஜ்ஸா. முந்நூறில் எண்பது பேர் மட்டுமே மீந்திருந்தனர். எனில், அது எத்தகைய கடினமான வழியாக இருந்திருக்க வேண்டும்? தம் சகாக்கள் வழியிலேயே மாண்டுபோனதற்கு நின்று வருந்தக்கூட நேரமில்லை மிஞ்சியவர்களுக்கு. புயலாய் நுழைந்தனர் தஸ்தருக்குள்!

நகரினுள் நுழைந்த அந்தச் சிறிய எண்பதுபேர் படை வீர விளையாட்டு நிகழ்த்தியது. வாளை உருவிக் கொண்டு அரணுக்குப் பாதுகாவலாய் இருந்த வீரர்களை சப்தமேயின்றி விறுவிறுவென்று கொன்று எறிந்தனர் அவர்கள். அரணின் கதவுகளைத் திறந்து “அல்லாஹு அக்பர்” என்று அவர்கள் உரத்து ஒலியெழுப்ப, அவ்வளவுதான் ... வெளியில் காத்துக் கொண்டிருந்த முஸ்லிம்களின் படை பதிலுக்கு “அல்லாஹு அக்பர்” என்று சொல்லி நகருக்குள் காட்டாற்று வெள்ளமாய்ப் புகுந்தது.

விடிந்தது பொழுது!

குருதி பெருக்கெடுத்தோடிய மிகக் கடுமையான போர் அது. இஸ்லாமிய வரலாற்றில் முக்கியமானதொரு போர். பதினெட்டு மாதகால முற்றுகையை எதிர்த்துக் கொண்டிருந்த பாரசீகர்கள் அன்று நிலைகுலைந்து போயினர். ஈட்டியும் அம்பும் வாளும் பறந்து சுழன்றுகொண்டிருக்க படுஆக்ரோஷமாய் நிகழ்ந்து கொண்டிருந்தது போர். அவ்வளவு அமளியின் நடுவே ஹுர்முஸானையே முஜ்ஸாவின் கண்கள் தேடிக் கொண்டிருந்தன. ஒருவழியாய் அவனைக் கண்டதும் தனது வாளை உருவி ஏந்தி கிடுகிடுவென முன்னேறினார் முஜ்ஸா. ஆனால் தனது படை வீரர்களின் குழுவில் மறைந்து போனான் ஹுர்முஸான். ஏமாற்றமடைந்த முஜ்ஸா அவனைத்தேட சிறிது நேரத்தில் மீண்டும் அவனைக் கண்டுவிட்டார்.

இம்முறை தாமதியாமல் பாய்ந்து முன்னேறினார் முஜ்ஸா. அவனை நெருங்கி, தாக்கத் தொடங்க இருவர் மத்தியிலும் பொறி பறக்கும் வாள் சண்டை உருவானது. மணல் புழுதி கிளம்பி எழ, வாட்களின் உரசலில் தீப்பொறி பறந்தது. கடுமையான அந்தச் சண்டையின் இறுதியில் தனது வாளால் ஹுர்முஸானைத் தீர்த்துக் கட்ட முஜ்ஸா பாய்ந்த வேகத்தில் அவர் இலக்குத் தப்பியது. ஆனால் ஹுர்முஸான் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டான். தனது வாளை அவர்மேல் அவன் பாய்ச்ச, வீர மரணம் எய்தினார் முஜ்ஸா.

தொடர்ந்து நடைபெற்ற போரில் முஸ்லிம் படையினர் வென்று ஹுர்முஸானை உயிருடன் சிறைப் பிடித்ததும், அவனை அவனுடைய ராஜ அலங்காரத்துடன் இரத்தினக்கல் பதித்த மகுடம், தங்க இழையிலான ஆடை ஆகியனவற்றுடன் மதீனாவிற்கு கலீஃபா உமரிடம் அழைத்துச் சென்றதும், ஹுர்முஸானுக்கும் உமருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலும், இறுதியில் ஹுர்முஸான் இஸ்லாத்தை ஏற்றதும் சுவையான தனிக் கதை. மற்றொரு முக்கியத் தோழரின் வரலாறும் இந்தப் போரில் வந்து முடிவுறும். அந்த சாகசமும் ஒரு தனிக் கதை.

தோழர்கள் யாரும் தங்களை வரலாற்று நாயகர்களாக நினைத்துக் கொண்டு வாழ்க்கையை வாழவில்லை, நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ளவில்லை, முன்தீர்மானங்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. வாழ்ந்தார்கள் -  உயிரும் மூச்சும் மரணமும் இறைவனுக்காக அவனுடைய திருத்தூதருக்காக என்று வாழ்ந்தார்கள். அதுபோதும், அதுமட்டும் போதும் என்று வாழ்ந்தார்கள். அதை பொருந்திக் கொண்டான் இறைவன். விளைவு? வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணம், அதில் அவர்களின் சாகசம் என்று அவர்களது மேன்மை, உயர்வு, பெருமை வரலாற்றின் அத்தியாயங்களாய்ப் பதியப்பட்டுவிட்டன.

தஸ்தர் வெற்றியின் பின்னணியில் பெரும்பங்கு வகித்த முஜ்ஸஅதிப்னி ஃதவ்ருஸ் ஸதூஸீக்கு வீரமரண அந்தஸ்துடன் இவ்வுலகில் முடிவிற்கு வந்தது அவருடைய அத்தியாயம்.

ரலியல்லாஹு அன்ஹு!

ஸுராக்கா பின் மாலிக் (ரலி)


ச்சி வெயில் கொளுத்தும் நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். வழக்கமற்ற அந்நேரத்தில் தம் அணுக்கத் தோழர் அபூபக்ரு ரலியல்லாஹு அன்ஹுவின் வீட்டிற்கு வந்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். "வெகு நிச்சயமாய் ஏதோ ஒரு முக்கியமான விஷயம். இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.

"அனுமதி கிடைத்துவிட்டது" என்றார்கள் நபியவர்கள்.
"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?"
"ஆம்! தோழமை"
அதைக் கேட்டு அழுதார் அபூபக்ரு!
மறுநாள் காலை. குரைஷியர்கள் கண்விழிக்கும்போது அவர்களைக் குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்துவதற்குக் காத்திருந்தது அந்தச் செய்தி. பரபரப்புத் தொற்றியது மக்காவில். குரைஷிக் குலத்தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை.
"அது எப்படி முடியும்?" பரபரப்புடன் நாலாபுறமும் குழுக்கள் பறந்தன.
அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்ப, இறுதியில் பரிசுத் தொகை பறையறிவிக்கப்பட்டது, "நூறு ஒட்டகங்கள். முஹம்மதுவை உயிருடனோ அன்றியோ கொண்டு வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு"
மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையிலுள்ள பதினெட்டுப்பட்டி மக்களுக்கும் தகவல் சென்று சேர்ந்தது.
* * * * *
ஹிஜ்ரீ, ஹிஜ்ரத், புலப்பெயர்வு என்றெல்லாம் முந்தைய தோழர்களுடைய வரலாற்றில் வாசித்துக் கொண்டே -  நின்று விரிவாய்த் தெரிந்து கொள்ள நேரமில்லாமல் - வந்துவிட்டோம். இங்குப் பார்த்துவிடுவோம்.
மக்காவில் இஸ்லாமிய அழைப்புத் துவங்கிய நாளாய் முஸ்லிம்களுக்குத் தொடங்கிய துன்பமும் சோதனையும் பொறுத்துக் கொள்ளவியலாத நிலையை எட்டியிருந்தன. அந்நிலையில் மதீனாவிலிருந்து வந்த மக்களுடன் அகாபாவில் ரகசிய உடன்படிக்கை ஏற்பட, மதீனாவில் முஸ்லிம்களுக்கு இணக்கமான சூழ்நிலையொன்று மெதுவே உருவாக ஆரம்பித்திருந்தது. நபியவர்கள் மக்காவிலிருந்த முஸ்லிம்களிடம் தலையசைக்க, குரைஷிகளின் கவனத்தைக் கவராமல் தனித்தனியாகவும் சிறுசிறு குழுக்களாகவும் முஸ்லிம்கள் மதீனாவிற்குப் புலம்பெயர ஆரம்பித்தனர். இதற்கும் முன்னர் ஒரு குழுவினர் அபிஸீனியாவுக்குப் போய்விட்டிருந்தனர்.
அபூபக்ரு தாமும் மதீனாவிற்குப் புலம்பெயர்ந்துவிடலாம் என்று ஒருநாள் நபியவர்களிடம் அனுமதி கேட்டார்.
"அவசரப்படாதீர்கள். அநேகமாய் அல்லாஹ் உங்களுடன் ஒரு சிறந்த தோழரை உடன் அனுப்பிவைப்பான்" என்று மட்டும் முஹம்மது நபியிடமிருந்து பதில் வந்தது.
"பயணத் தோழரா? அது யாராக இருக்கும்?" ஆர்வத்துடன் கூடிய எதிர்பார்ப்பு ஒன்று அவர் மனதில் உருவானது. ஆனால் ஏதோ புரிந்தது போலவும் இருந்தது. பயணத்திற்குத் தயாராய் இரு ஒட்டகங்களை ஏற்பாடு செய்து வைத்துக் கொண்டார். ஒன்று தனக்கும் மற்றொன்று யாரென்று தெரியாத அந்தப் பயணத் தோழருக்கும்.
இதனிடையே முஸ்லிம்கள் மதீனாவிற்கு நழுவுவதையும் முஹம்மது தமது பிரச்சாரத்தை நிறுத்தவே போவதில்லை என்பதையும் உணர்ந்த குரைஷிகள், "இதெல்லாம் சரிப்படாது, ஓர் இறுதி முடிவுக்கு வந்தாகவேண்டும்" என்று கொடூரத் திட்டமொன்று வகுத்தனர். "நமது அனைத்துக் கோத்திரத்தில் இருந்தும் ஆளுக்கொரு கை போட்டு அவரைக் கொன்றுவிடலாம். அதற்குப் பழி தீர்க்க வேண்டுமெனில் அனைவரையும் எதிர்க்கும் நிர்ப்பந்தம் முஹம்மதின் பனூ ஹாஷிம் கோத்திரத்திற்கு ஏற்படும். எனவே அவர்கள் போரிலெல்லாம் இறங்க முடியாது. வேண்டுமானால் கொலைக்குப் பகரமாய் ஈட்டுத் தொகை அளித்து விடுவோம்"
திட்டமிடுவோரை எல்லாம் மிகைத்தத் திட்டமிடுவோன், வானவர் தலைவர் மூலமாய்ச் செய்தி அனுப்பிவைத்தான் நபியவர்களுக்கு - அதனுடன் சேர்த்து அனுமதியும். தாருந்நத்வாவில் குரைஷிகள் கூடி சதித்திட்டம் தீட்ட, இங்கு நபியவர்கள் அமைதியாய், மிகத் தெளிவாய், படு துல்லியமாய் எதிர்த் திட்டம் வகுத்தார்கள்.
அபூபக்ருவின் இல்லத்திற்குக் காலையிலோ மாலையிலோ நபியவர்கள் வருகை என்பது தவறாத வழக்கம். அந்தளவு தோழமை. மிகவும் அலாதியான தோழமை. இருவருக்கும் இடையே இருந்த அணுக்கம் ஓர் அழகிய உன்னதம். ஆனால் அன்று நண்பகல் நேரம். மக்காவில் மக்கள் வீட்டினுள் அடங்கிக் கிடந்தனர். உச்சி வெயில் மண்டையைப் பிளக்கும் அந்நேரத்தில் அபூபக்ருவின் வீட்டிற்கு வந்தார்கள் நபியவர்கள். அந்நேரம் அங்கு அவரின் இரு மகள்கள் அஸ்மா, ஆயிஷா - ரலியல்லாஹு அன்ஹுமா - மட்டுமே இருந்தனர்.
"விஷயம் வெகுமுக்கியம் போலிருக்கிறது. இல்லையெனில் இந்நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் வரமாட்டார்களே" என்று ஆச்சரியத்துடன் அவரை வரவேற்றார் அபூபக்ரு.
அவரது கட்டிலில் அமைதியாக அமர்ந்து "உங்களுடன் உள்ள இவர்களை ஒதுங்கிக் கொள்ளச் சொல்லுங்கள்" என்றார்கள் நபியவர்கள்.
"அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இவர்கள் என்னுடைய மகள்கள்தாம். என்ன விஷயம்?"
"நான் புலம்பெயர எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது"
"அல்லாஹ்வின் தூதரே, தோழமை?" நானும் உங்களுடன் வர அனுமதியுண்டா என்பதை அப்படிக் கேட்டார் அபூபக்ரு.
"ஆம்! தோழமை"
அழுதார் அபூபக்ரு; ஆனந்தத்தால் அழுதார்! மகிழ்ச்சியிலும் இப்படி அழமுடியுமா என்பதை ஆச்சரியத்துடன் பார்த்தார் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
"அல்லாஹ்வின் தூதரே! இதோ என்னுடைய இரு ஒட்டகங்கள். இத்தருணத்திற்காகவே நான் தயார்ப்படுத்தி வைத்திருந்தேன்"
"அவற்றிக்கான விலைக்கே நான் பெற்றுக் கொள்வேன்" என்றார்கள் முஹம்மது நபி.
இதென்ன பேச்சு? அப்படியெல்லாம் இல்லை, "இது நான் தங்களுக்கு அளிக்கும் நன்கொடை" என்றார் அபூபக்ரு.
"ஓ அபூபக்ரு! இந்தப் பயணம் அல்லாஹ்விற்காக மேற்கொள்ளப்படும் பயணம். அதற்கு உண்டாகும் செலவை நான் எனது பணத்திலிருந்த அளிக்கவே விரும்புகிறேன். ஏனெனில் எனது செலவிற்கு உண்டான வெகுமதியை நான் இறைவனிடம் ஈட்ட விரும்புகிறேன்"
இறைவனின் தூதர், இறைவனுக்காகத் தான் அடைந்த துன்பம், மேற்கொள்ளப் போகும் அசாத்தியச் சோதனைகள் என்பதையெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறைவனின் அளவற்ற வெகுமதி – அதை எவ்வகையிலெல்லாம் ஈட்ட முடியுமோ அவ்வகையிலெல்லாம் ஈட்டுவதற்கு முன்நின்றார் அந்த மாமனிதர் - ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்!
பயணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைக் கிடுகிடுவென செய்தார்கள் அஸ்மாவும் ஆயிஷாவும். உணவை எடுத்து வைத்து உண்பதற்கான விரிப்பு அடங்கிய பயண மூட்டை தயாரானது. அந்த மூட்டையின் பையை எதைக் கொண்டு கட்டுவது என்று யோசித்த அஸ்மா தமது இடுப்பு வார்த்துணியை இரண்டாகக் கிழித்து அதில் ஒன்றைக்கொண்டு கட்டினார். அன்றிலிருந்து அவருக்கு, "தாத்துந் நிதாக்கைன் - வாரிரண்டு வனிதை" என்று பட்டமே ஏற்பட்டுவிட்டது.
மக்காவில் தன்னைக் காணவில்லை என்றதும் குரைஷிகளுக்கு நிச்சயமாய் மதீனா நினைவிற்கு வரும்; மதீனாவுக்குச் செல்வோர் அனைவரும் பயணிக்கும் பாதையைத் தவிர்ப்பதே உசிதம்; அதற்கு மாற்றுவழி தெரியவேண்டும். அதற்கென அப்துல்லாஹ் இப்னு உரைகத் என்பவரை நியமனம் செய்து கொண்டார்கள் நபியவர்கள். அப்துல்லாஹ் ஒரு மிகத் தேர்ந்த வழிகாட்டி. முஸ்லிம் அல்லன் என்றபோதிலும் நம்பிக்கைக்கு உரியவன். அவனிடம் இரு ஒட்டகங்களையும் ஒப்படைத்து, "இதைப் பாதுகாப்பாக பராமரிக்கவும் குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட இடத்திற்கு இவற்றை ஓட்டிக் கொண்டு வரவும்" என்றும் தகவல் அறிவிக்கப்பட்டது.
நபிகள் புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் செல்ல உருவான திட்டம் அலீ, அபூபக்ரு மற்றும் அவர் குடும்பத்தினர் - ரலியல்லாஹு அன்ஹும் - தவிர வேறு யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இரவு கவிழ்ந்தது. முஹம்மது நபியை அவரது வீட்டில் புகுந்து கொலை புரிய குரைஷிகளின் கூட்டணிக் கூட்டம் பதுங்கிவர, அலீயைத் தமது கட்டிலில் உறங்க வைத்து, குரைஷிகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தமது வீட்டிலிருந்து வெளியேறினார்கள் நபியவர்கள். அபூபக்ருவின் வீட்டிற்கு வர, அவர் தயாராய்க் காத்திருந்தார். அவரது வீட்டின் பின்புறமிருந்த ஒரு சிறு வாயிலின் வழியே இருவரும் வெளியேறினார்கள். அங்கிருந்து உடனே மதீனா கிளம்பாமல் மக்காவிலிருந்து மதீனா நகருக்குச் செல்லும் பாதையின் நேரெதிர்த் திசையில் - யமனுக்குச் செல்லும் வழியில் - இருவரும் பயணித்து தவ்ருக் குகையை அடைந்து, பதுங்கிக் கொண்டார்கள்.
நபியவர்களின் வீட்டிற்கு வெளியே பதுங்கியிருந்த கொலைக் கும்பல், நபியவர்கள் தப்பித்துவிட்டதை அறிந்து எழுப்பிய கோபக் கூச்சல் ஊரெங்கும் தெருவெங்கும் மூலை முடுக்கெங்கும் பரவி மக்காவில் அன்றைய தலைப்புச் செய்தியானது.
"முஹம்மது இரவோடு இரவாக மக்காவிலிருந்து வெளியேறி விட்டார்"
குரைஷிக் கூட்டத் தலைவர்களால் அச்செய்தியை நம்ப முடியவில்லை. "அது எப்படி முடியும்? வீடு வீடாகத் தேடுங்கள்" என்று ஓட ஆரம்பித்தார்கள். நபியவர்களின் பனூ ஹாஷிம் கோத்திரத்தார் வீடுகளில்தான் முதலில் தேடினர். பிறகு தோழர்களின் வீடுகள்.
அபூபக்ருவின் வீட்டின் கதவைத் தட்ட அஸ்மா வெளியே வந்தார். அப்பொழுது இளவயதினர் அவர். அபூஜஹ்லு கோபத்துடன், "ஏய் பெண்ணே, உன் அப்பன் எங்கே?" என்றான்.
"அவர் இப்பொழுது எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியாது" என்றார் அஸ்மா.
தேடிக்களைத்த கோபத்திலும் எரிச்சலின் உச்சத்திலும் இருந்த அபூஜஹ்லு, பெண் என்றெல்லாம் பாராமல் அஸ்மாவின் முகத்தில் ஓங்கி அறைய, அவரது காதணி தெறித்து விழுந்தது. சீற்றத்தில் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது குரைஷித் தலைவர்களுக்கு. முஹம்மது நிச்சயமாய் மக்காவில் ஒளிந்தில்லை, வெளியேறிவிட்டார் என்பது அவர்களுக்கு உறுதியானது.
ஜி.பி.எஸ்., இணையம், சாட்டிலைட் போன்ற நவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில் அவர்களிடம் வேறு வசதி இருந்தது. பாலையில் உள்ள வழித்தடத்தின் அடிச்சுவட்டைக் கொண்டே தொலைந்தவர்களைக் கண்டுபிடிப்பது, பின்தொடர்வது ஆகிய சாமர்த்தியம் சிலருக்கு இருந்தது. வழித்தட வித்தகர்கள். அவர்களையெல்லாம் திரட்டிக் கொண்டு முஹம்மது எந்தப் பாதையில் தப்பித்திருப்பார் என்று தேடத் துவங்கியது அக்கூட்டம். தேடி, பின்பற்றி, சரியாகத் தவ்ருக் குகை அமைந்துள்ள மலையின் அடிவாரம்வரை வந்துவிட்டது அக்குழு.
"அடிச்சுவடு இங்கு முடிகிறது. இதைத் தாண்டி அவர்கள் சென்றிருக்க முடியாது" என்றார்கள் அந்த நிபுணர்கள்.
குகை என்றவுடன் நம் கற்பனையில் மலை, மலையில் ஒரு பொந்துதான் தோன்றும். தவ்ருக் குகை அப்படியில்லை. ஒரு குழிபோல் ஆழமாயிருக்கும். அங்குதான் மறைந்திருந்தார்கள் முஹம்மது நபியும் அபூபக்ரும். குகையின் வாயில்வரை வந்துவிட்டது அக்கூட்டம். அபூபக்ரு நிமிர்ந்து பார்த்தால் அங்குமிங்கும் நடந்து கொண்டிருக்கும் அவர்களுடைய கால்கள் தெரிந்தன. திகிலில் வருந்தி கண்ணீர் விட்டார் அபூபக்ரு.

"ஏன் அழுகை?" என்பதுபோல் அவரை இதமாய்ப் பார்த்தார்கள் நபியவர்கள். அபூபக்ரு கிசுகிசுப்பான குரலில் கூறினார்.
"அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மேல் ஆணையாகக் கூறுகிறேன். நான் எனக்காக அழவில்லை. தங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பது மட்டுமே என் அச்சம்"
திடமான ஆறுதல் வார்த்தைகள் வெளிப்பட்டன நபியவர்களிடமிருந்து "வருந்தாதீர்கள். அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்" அல்லாஹ் அபூபக்ரின் உள்ளத்திற்கு சாந்தியை அருளினான்.
மேலே நின்று கொண்டிருந்தவர்களின் கால்களைப் பார்த்தபடி மெல்லிய குரலில் கூறினார், "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் யாராவது அவர்களது கால்களைக் குனிந்து பார்த்தாலே போதும், நம்மைக் கண்டு விடுவார்கள்"
"இருவருடன் துணைக்கு மூன்றாவதாக அல்லாஹ் இருக்க என்ன கவலை அபூபக்ரு?" எத்தகைய உறுதி அது? எத்தகைய ஆழ்மன நம்பிக்கை அது?
இதற்குள் மேலே நின்று கொண்டிருந்த ஒருவன் கூறினான், "நாம் இந்தக் குகைக்குள் இறங்கி அங்கு என்ன இருக்கிறது என்று பார்த்துவிடுவோம்"
அதைக் கேட்ட உமைய்யா இப்னு ஃகலஃப் ஏளனமாய்ச் சிரித்து, "இங்கே பார், குகையின் வாசலை ஒரு சிலந்தி வலை அலங்கரித்துக் கொண்டிருப்பதை. அந்த வலைக்கு முஹம்மதைவிட வயது அதிகம் இருக்கும்" படு இலேசான படைப்பினத்தைக் கொண்டு, ஆளரவமற்ற பாழடைந்த குகை என்ற எண்ணத்தை பராக்கிரம எதிரிகளின் மனதில் ஏற்படுத்தி, வெகு சுலபமாய் அற்புதம் நிகழ்த்தினான இறைவன். யார் அறிவார் அவன் வீரர்களை?
ஆனால் அபூஜஹ்லுக்கு மட்டும் குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருந்தது. "அல்-லாத் மற்றும் அல்-உஸ்ஸாவின் மீது சத்தியமாகச் சொல்கிறேன், முஹம்மது இங்குதான் எங்கேயோ இருக்கிறார். நம்மைப் பார்த்துக் கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் இருக்கிறார். அவருடைய மந்திர வித்தைதான் நாம் அவரைக் காணமுடியாமல் நம் கண்களைக் கட்டிப் போட்டுவிட்டது"
அவன் கண்களை மறைத்தது மந்திரமா அல்லது அறியாமையா? என்னவென்று சொல்வது?
அபூபக்ருக்கு அப்துல்லாஹ் என்றொரு மகன் இருந்தார். சிறப்பான புத்திக் கூர்மையுள்ளவர். இந்த நிகழ்வின்போது அவர் பதின்ம வயதுச் சிறுவர். பிரமாதமான உளவுவேலை புரிந்தார் அப்துல்லாஹ். பகலெல்லாம் குரைஷியர்களுடனேயே வலம் வந்து அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள், அவர்களுடைய திட்டம் என்ன, எவ்வளவு குடைச்சலில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்வது அவர் வேலை. இரவு படர்ந்ததும் குரைஷியர் கண்களில் படாமல் தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். மக்காவின் நிகழ்வுகளையெல்லாம் அவர்களுக்கு அறிவித்துவிட்டு இரவு முழுவதும் அவர்களுடனேயே குகையில் தங்கிக் கொள்வார். பிறகு பொழுது புலரும் முன்னரே கிளம்பி தனது வீட்டிற்கு வந்துவிடுவார். இவருக்கு இந்தப் பணி என்றால், ஆமிர் இப்னு ஃபுஹைரா என்பவருக்கு வேறொரு பணி இருந்தது.
அபூபக்ரிடம் பணியாளாக இருந்தார் ஆமிர் இப்னு ஃபுஹைரா. அவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருந்த தோழர். இரவானதும் ஆட்டு மந்தையொன்றை மேய்ச்சலுக்கு ஓட்டுவதுபோல் ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிடுவார். ஆட்டுப்பால் நபியவர்களுக்கும் அபூபக்ருக்கும் உணவாகிவிடும். பிறகு விடிந்ததும் அப்துல்லாஹ் கிளம்பிச் சென்றவுடன் தமது மந்தையை ஓட்டிக்கொண்டு ஆமிர் மக்கா வந்துவிடுவார். அதிலொரு தந்திரமும் இருந்தது. வழித்தட வித்தகர்கள் இருந்தார்கள் என்று பார்த்தோமல்லவா? குரைஷிகளுக்கு ஏதேனும் சிறு சந்தேகம் ஏற்பட்டு அப்துல்லாஹ்வின் வழித்தடத்தைப் பின்பற்றிவிட்டால்? எனவே அப்துல்லாஹ் குகைக்கு வந்து திரும்பிய வழித்தடத்தையெல்லாம் வீடுதிரும்பும் ஆடுகள் கலைத்துக் கொண்டே வந்துவிடும். இத்தகைய எளிய உத்திகள் ஆத்திரத்தில் புத்திமட்டுப் போன எதிரிகளை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.
இவ்விதமாய் மூன்று இரவுகள் கழிந்தன. அதற்கு அடுத்தநாள் காலை முன்னரே பேசி வைத்துக் கொண்டபடி வழிகாட்டி அப்துல்லாஹ் இப்னு உரைகத் ஒட்டகங்களை ஓட்டிக் கொண்டு தவ்ருக் குகைக்கு வந்துவிட்டான். அவர்களுடன் ஆமிர் இப்னு ஃபுஹைராவும் சேர்ந்து கொள்ள, இஸ்லாமிய வரலாற்றுப் பயணம் துவங்கியது - ஹிஜ்ரீ பிறந்தது.
* * * * *
துடித்துக் கொண்டிருந்த குரைஷிகள் தங்களது முயற்சியை அவ்வளவு எளிதில் கைவிடுவதாய் இல்லை. முஹம்மது நபியை எப்படியும் பிடித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மக்காவிலிருந்து மதீனா செல்லும் பாதையில் உள்ள சுத்துப்பட்டுப் பதினெட்டுப் பகுதிகளுக்கும் ஆள் அனுப்பினார்கள்.
"முஹம்மது தப்பித்துவிட்டார். அவரை உயிருடனோ உயிரன்றியோ கண்டுபிடித்துக் கொண்டு வருபவர்களுக்கு சிறப்பான நூறு ஒட்டகங்கள் பரிசளிக்கப்படும்"
ஒட்டகங்களை சர்க்கஸில் பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு நூறு ஒட்டகங்களின் மதிப்பு புரிவது சற்றுச் சிரமம். அக்காலத்தில் அது மிகப்பெரிய பரிசுத் தொகை. எவ்வளவு பெரிசு? நூறு கார்கள் அதுவும் சிறப்பான பென்ஸ் கார்கள் பரிசாகக் கிடைப்பதை நினைத்துப் பாருங்கள், அனுமானம் கிடைக்கும்.
மக்காவிலிருந்து சற்றுத் தூரத்தில் குதைத் என்றொரு ஊர். அங்கு முத்லஜ் எனும் பதுஉக் கோத்திரத்தினர் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் வழக்கமாய்க் கூடிப்பேசும் பகுதி ஒன்று இருந்தது. அங்கு வந்த குரைஷியரின்  தூதுவன் தண்டோரா அடிக்காத குறையாய் "நூறு ஒட்டக" அறிவிப்பை உரத்து வெளியிட்டான். 'அம்மாம்' பெரிய பரிசு அறிவிப்பைக் கேட்டு அனைவரின் மூக்கும் ஆசையில் ஒட்டகம் போல் "புஸ் புஸ்” என்று மூச்சுவிட, ஒருவரின் கவனத்தை அது மிக அதிகமாய்க் கவர்ந்தது.
அவர் ஸுராக்கா இப்னு மாலிக்.
ஸுராக்கா உயரமான ஆஜானுபாகுவான தோற்றம். சிறந்த குதிரைவீரர். தவிர சிறந்த கவிஞரும்கூட. கவிதை பாடியா தப்பித்தவர்களைப் பிடிக்கப் போகிறார்? அவரது அறிவுப் புலமையைப் பற்றிய அபிப்ராயம் நம் மனதில் ஏற்படத் தெரிந்து கொள்ளவே இந்தத் தகவல். மற்றபடி நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவரது முக்கியமான மற்றொரு தகுதியை. இவரும் ஒரு வழித்தட வித்தகர். அதில் பிரமாதமான ஆற்றல் அவருக்கு உண்டு.
எப்படியும் தான் அந்தப் பரிசை அடைந்துவிட வேண்டும், நிச்சயமாய் "என்னால் முடியும் தம்பி” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார். ஆனால் படு கவனமாய்த் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார். "யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது ஸுராக்கா. அதோபார் அனைவரது கண்களிலும் பேராசை ஜொலிப்பதை. எல்லோரும் அந்தப் பரிசைப் பெறப் போட்டியில் இறங்கிவிட்டால் ஆளுக்கு ஓர் ஒட்டகமோ அரை ஒட்டகமோதான் கிடைக்கும். எனவே அமைதி, அமைதி..." என்று எதுவும் பேசாமல் சாந்தமாய் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தார்.
அப்பொழுது அங்கு வந்தான் அவர்கள் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவன். "அல்லாஹ்வின்மேல் ஆணையாகச் சொல்கிறேன். மூன்று பேர் என்னைத் தாண்டிச் செல்வதைப் பார்த்தேன். அவர்கள் முஹம்மது, அபூபக்ரு, மற்றும் அவர்களுடைய வழிகாட்டி என்று நினைக்கிறேன்"
"ஆஹா, இதென்ன புதுக் குழப்பம்" என்று மருகிய ஸுராக்கா, அவனது ஐயத்தோடு கூடிய பேச்சைத் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, "அட, அவர்களா? நானும் பகலில் பார்த்தேன், அவர்கள் தங்களது மந்தையிலிருந்து ஓடிவிட்ட ஒட்டகத்தைத் தேடிப் பகல் முழுதும் அலைந்து கொண்டிருந்தவர்கள்" என்று அப்படியே வாயை அடைத்தார் ஸுராக்கா.
"இருக்கலாம்" என்று முனகிக்கொண்டே அமைதியாகிவிட்டான் அந்த மனிதன். இப்பொழுது உடனே எழுந்து சென்றால் மேலும் சந்தேகம் ஏற்படும் என்று தோன்றியது. படபட இதயத்தை அடக்கிக்கொண்டு காத்திருந்தார். பிறகு பேச்சு திசைமாறி அவரவரும் வேறுவேறு விஷயங்களில் மூழ்கிவிட, "இதுதான் சமயம்" என்று அங்கிருந்து கம்பி நீட்டினார் ஸுராக்கா.
வேகமாக ஆனால் அதே சமயம் தமது பதற்றத்தை அடக்கிக் கொண்டு வீட்டை அடைந்தார். தம் பணிப்பெண்ணை அழைத்துக் கிசுகிசுக்க, ஒரு குதிரையும் அவரது ஆயுதங்களையும் யார் கண்ணிலும் படாமல் கொண்டு சென்று அருகிலுள்ள ஒரு பள்ளத்தாக்கில் குதிரையை நிறுத்திக் கட்டிவிட்டு, அதன் அருகில் ஓரிடத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்தாள் அப்பணிப்பெண். "முடிந்தது வேலை" என்று அவள் வந்து சொன்னதும், "ஒரே புழுக்கமாக இருக்கிறது, காலாற நடந்திட்டு வர்ரேன்" என்பதுபோல் யார் கவனத்தையும் கவராமல் கிளம்பினார் ஸுராக்கா. அந்தப் பள்ளத்தாக்கை அடைந்து தமது கவசத்தை அணிந்துகொண்டு, ஆயதங்களையும் பூட்டிக்கொண்டு பரிதியில் ஏறி அமர்ந்து, "ஹை... ஹை.." என்றதும் விருட்டென்று கிளம்பியது குதிரை. அதுவரை கட்டிக்காத்த நிதானத்தையெல்லாம் குதிரையின்மேல் வடிகாலாய் அவர் இறக்க, பாலைவனத்தில் பறந்தது குதிரை.
கடும் வேகத்தில் குதிரை ஓடிக்கொண்டிருக்க, திடீரென அது நிகழ்ந்தது. தடுமாறித் தரையில் விழுந்தது குதிரை! ஒன்றும் புரியவில்லை ஸுராக்காவிற்கு. "ஏன் என்னாச்சு உனக்கு?” என்று அந்த அதிர்ச்சியில் அவருக்கு வார்த்தை தடுமாறியது. ஏதோ ஒரு தீங்கு இருப்பதாய் அவர் உள்மனதில் எண்ணம் தோன்றியது. குதிரையைத் தட்டி எழுப்பி மீண்டும் ஏறிக் கொண்டார். ஓட ஆரம்பித்தது குதிரை. சிறிது நேரத்தில் அதேபோல் மீண்டும் தடுமாறி விழுந்தது. அக்கால அரபியருக்கு சகுனம், தீக்குறி இதிலெல்லாம் நம்பிக்கை அதிகம். ஸுராக்காவிற்கும் அந்நம்பிக்கை அதிகம் இருந்தது. இரண்டாவது முறையும் அசந்தர்ப்பமாய் இப்படி நிகழவே அவருக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. தேடலை இத்துடன் முடித்துக் கொள்வோம் என்றே முடிவெடுத்துவிட்டார். ஆனால் நூறு ஒட்டகங்களும் அசைந்து அசைந்து அவர் மனக்கண்ணில் அணிவகுத்துச் செல்ல, உடலில் படிந்திருந்த மணலையெல்லாம் தட்டிவிட்டுக் கொண்டு மீண்டும் குதிரையைக் கிளப்பினார்.
சற்று நேரத்தில் முஹம்மது நபியும் அவருடன் இருந்தவர்களும் கண்ணில் தென்பட ஆரம்பித்தார்கள். அப்பாடா, ஒருவழியாய் விழுந்து எழுந்து நெருங்கிவிட்டோம் என்று தோன்றியது. குதிரையில் அமர்ந்தவாறே தமது வில்லில் அம்பைப் பொருத்தி நாணிழுத்து அவர்கள் மீது குறிபார்க்க, இம்முறை வேறோர் அதிசயம் நிகழ்ந்தது. நின்ற நிலையில் குதிரையின் கால்கள் மணலில் புதைய ஆரம்பித்தன! புழுதிப்புகை எழுந்து பார்வையை மறைத்தது! குதிரையை அடித்து உதைத்து உந்தினால், அது ஓர் அங்குலம் கூட நகரவில்லை! என்னவோ தனது குளம்புகளை பூமியில் வைத்து ஆணியில் அறைந்ததைப்போல் அப்படியே நின்று கொண்டிருந்தது குதிரை. அதற்குமேல் ஸுராக்காவால் முடியவில்லை. நபியவர்களை நோக்கி உரத்தக் குரலில் இறைஞ்சினார்.
"நீங்கள் இருவரும் உங்கள் இறைவனிடம் என் குதிரையின் கால்களை விடுவிக்கும்படி இறைஞ்சுங்கள். நான் உங்களைப் பின்தொடர மாட்டேன், இது சத்தியம்"
இதையெல்லாம் நபியவர்களும் அபூபக்ரும் மற்றவரும் பார்த்துக் கொண்டுதானிருந்தார்கள். ஸுராக்காவின் கோரிக்கையை ஏற்று நபியவர்கள் இறைவனிடம் இறைஞ்ச, குதிரையின் கால்கள் மணலிலிருந்து விடுபட்டன. அதைக் கண்டு "அப்பாடா” என்று மகிழ்ந்தார் ஸுராக்கா. அத்துடன் திரும்பி இருக்கலாமில்லையா? பிரச்சினை தீர்ந்ததும் சத்தியம் மறந்தது; மீண்டும் ஒட்டகங்கள் வரிசையாய் மனக்கண்ணில் அசைந்தாடி வந்தன.
அந்த இடத்தில் மணல் ஏதோ தொந்தி போலும் என்று மீண்டும் குதிரையில் பின்தொடர ஆரம்பித்தார். ஆனால் இம்முறை இன்னம் ஆழமாய்க் குதிரையின் கால்கள் மணலில் புதைந்தன! இனி செய்வதற்கு ஏதுமில்லை, உயிர் பிழைத்தால் புண்ணியம் என்று முடிவெடுத்துவிட்டார் ஸுராக்கா.
"முஹம்மதே! எனது பொருட்கள், உணவு, ஆயுதங்கள் அனைத்தையும் தந்து விடுகிறேன்; எடுத்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், நானும் இனி உங்களைத் தொடரமாட்டேன், மற்றவர்கள் உங்களைத் தொடர்ந்து பிடிக்க வருவதையும் தடுப்பேன், தயவுசெய்து இம்முறை உங்கள் இறைவனிடம் சொல்லி என்னைக் காப்பாற்றுங்கள்"
"உனது பொருட்கள் எதுவும் எங்களுக்குத் தேவையில்லை, ஆனால் மற்றவர்கள் எங்களைப் பின்தொடராமல் தடுத்தால் போதும்"
பரிதாபகர நிலையில் இருந்த ஸுராக்கா தலையாட்டினார். நபியவர்கள் இறைவனிடம் பிரார்த்தனை புரிந்தார்கள்; குதிரையின் கால்கள் மணலிலிருந்து விடுபட்டன. பெரிய ஆசுவாச மூச்சு வெளிப்பட்டது ஸுராக்காவிடமிருந்து.
முஹம்மது நபியிடம், "கொஞ்சம் பொறுங்கள், நான் உங்களிடம் சற்றுப் பேசவேண்டும். அல்லாஹ்வின் மீது ஆணையாக, நான் எந்த உபத்திரவமும் புரிய மாட்டேன்"
"உனக்கு எங்களிடமிருந்து என்ன வேண்டும்?"
"முஹம்மதே! அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன், உங்களது மார்க்கம் விரைவில் மேலோங்கப் போகிறது, அது எனக்கு நிச்சயமாய்த் தெரிந்துவிட்டது. நீங்கள் வலிமையுள்ளவராய்த் திகழப் போகிறீர்கள். நான் அந்த சமயம் உங்களது ராஜாங்கத்திற்கு வருகை தந்தால் என்னை நீங்கள் கௌரவிக்க வேண்டும். அந்த வாக்குறுதியை நீங்கள் எனக்கு எழுத்திலும் தரவேண்டும்"
தான் துரத்தி வந்த முஹம்மது நிச்சயம் ஒரு சாதாரண மனிதர் அல்லர் என்பதை நடந்த நிகழ்வுகள் ஸுராக்காவிற்கு உறுதிப்படுத்திவிட்டன. இதுவரை நபியவர்களைப்பற்றி அவர் கேள்விபட்டிருந்ததையும் இப்பொழுது இந்த அதிசயங்களையும் கொண்டு யூகித்தபோது, விரைவில் முஹம்மது நபியின் அரசாட்சி அரேபியாவெங்கும் பரவப்போவது திண்ணம் என்பது அவருக்கு உறுதியாகிவிட்டது. அப்பொழுது தன்னை அடையாளம் தெரியாமல் முஹம்மது நபி மறந்துவிட்டால்? அதனால் அந்தக் கோரிக்கையை எழுப்பினார் ஸுராக்கா.
நபியவர்கள் விவரிக்க, ஆமிர் உலர்ந்த எலும்பொன்றில் எழுத, ஸுராக்காவிற்கு வாக்குறுதிவழங்கப்பட்டது. பெருமகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்ட ஸுராக்காவிடம் நபியவர்கள் கூறினார்கள், "குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதைக் கற்பனை செய்து கொள் ஸுராக்கா"
"யார்? பாரசீக நாட்டின் சக்கரவர்த்தி குஸ்ரூவா? அவரது கடகங்களா?” ஒன்றும் புரியாமல் ஆச்சரியத்துடன் கேட்டார் ஸுராக்கா.
"ஆம். பாரசீக நாட்டின் சக்கரவர்த்தியும் ஹுர்முஸின் மகனுமான குஸ்ரூவேதான்" என்று பதில் வந்தது.
அது தீர்க்கதரிசனம்! மகா தீர்க்கதரிசனம்!
தாம் பிறந்து, 53 வருடங்கள் வளர்ந்த மண்ணைத் துறந்து, அசந்தர்ப்பமான சூழ்நிலையில் வேறு ஊருக்குப் புலம்பெயர்ந்து சென்று கொண்டிருக்கிறார் ஒருவர். அவரோ அவர் எடுத்தியம்பும் மார்க்கமோ எத்தகைய வலுவான நிலையிலும் அப்போது இல்லை. அந்நிலையில் பாரசீக வல்லரசை ஆளும் சக்ரவர்த்தியின் கடகங்கள் அரபு நாட்டுப் பாலைவனத்தில் வசிக்கும் ஒரு பதுஉ அரபியிடம் வந்து சேரும் என்று அவர் சொல்லக் கூடியதெல்லாம் வெறும் ஆச்சரியமல்ல. அதையும் தாண்டி ஆச்சரியமானது.
வீட்டிற்குப் போய்ச் சேருவோம் என்று திரும்பலானார் ஸுராக்கா. வழியில் அவரது கோத்திரத்து மக்கள் சிலர் முஹம்மது நபியைத் தேடிக் கண்டுபிடிக்க வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடமெல்லாம், "எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். நான் வழித்தட விற்பன்னன் என்பது உங்களுக்கெல்லாம் நன்கு தெரியும். இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மணலையும் சல்லடையிட்டுத் தேடிவிட்டேன். முஹம்மது இந்தப் பக்கம் சென்றதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை"
"அப்படியா! ஸுராக்காவே சொல்லியாச்சு, இன்னம் என்ன" என்று திரும்பினார்கள் அவர்கள்.
தமக்கும் முஹம்மது நபிக்கும் இடையில் நடைபெற்ற விஷயத்தை மிகவும் ரகசியமாய் வைத்துக் கொண்டார் ஸுராக்கா. அவர்கள் நலமே மதீனா சென்று அடைந்தவிட்டார்கள், இனி குரைஷிகளால் அவர்களுக்கு ஏதும் ஆபத்தில்லை என்பது உறுதியானவுடன்தான் நடந்ததைத் தம் மக்களிடம் சொன்னார். அந்தச் செய்தி அப்படியே மிதந்து மக்காவில் அபூஜஹ்லு காதில் வந்து விழுந்தது. உடனே கிளம்பி ஓடினான் அபூஜஹ்லு. ஸுராக்காவைச் சந்தித்து, "இப்படி வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டாயே, உருப்படுவாயா நீ" என்பதுபோல் திட்டித் தீர்த்தான். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டார் ஸுராக்கா.
இறுதியில் கூறினார், "அபுல்ஹகம், அல்லாஹ்வின்மீது ஆணையாகச் சொல்கிறேன். மணலில் எனது குதிரை எப்படிப் புதையுண்டது என்பதை அன்று நீ பார்த்திருக்க வேண்டும். முஹம்மது, அல்லாஹ்வினுடைய தூதர்தான் என்பதை எந்தவிதச் சந்தேகமும் இன்றி நீ அறிந்து கொண்டிருப்பாய். அவரை யாரால் தடுத்து நிறுத்தமுடியும்?"
அந்தளவு உணர்ந்திருந்தால் அபுல்ஹகம், அபூஜஹ்லு என்று ஆகியிருக்க மாட்டானே!
காலம் உருண்டது. அடுத்த சில ஆண்டுகளில் பற்பல மாற்றங்கள் பரபரவென்று நிகழ்ந்தன. எதிரிகள் துரத்திக் கொண்டுவர, மக்காவிலிருந்து இருளில் வெளியேறிய நபியவர்கள் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புடைசூழ, அவர்களது வாள்கள் மினுமினுக்க, ஈட்டிகள் தகதகக்க, யுத்தமின்றி மக்காவைக் கைப்பற்றினார்கள். எந்த ஊரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாய் வெளியேறினார்களோ அதே ஊருக்குள் வெற்றி வீரராய் நுழைந்தார்கள்.
அகந்தையிலும் அகங்காரத்திலும் தங்கள் இஷ்டத்திற்குத் திரிந்து கொண்டிருந்தார்களே குரைஷி குலத்தலைவர்கள், அவர்களெல்லாம் பணிவுடனும் பயத்துடனும் மரியாதையுடனும் நபியவர்களிடம் கருணை வேண்டிக் காத்து நிற்கும் அபூர்வக் காட்சி மக்காவில் அரங்கேறிக் கொண்டிருந்தது.
"உங்கள் அனைவருக்கும் விடுதலை, எனக்கு உங்களிடம் எதுவும் தேவையில்லை. பழிவாங்குதல் இல்லை!"
"அனைவரும் மன்னிக்கப்பட்டீர்கள், அனைவருக்கும் மன்னிப்பு!"
நபியவர்கள் அறிவிக்க, அறிவிக்க குரைஷிகள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மயங்கிவிழாத குறை.
வரலாற்றுப் பக்கங்களில் ரத்தத்தையும் கொடூரத்தையும் அக்கிரமத்தையும் நிறைத்தவர்கள் இஸ்லாத்தினுள் நுழைந்து பச்சிளங் குழந்தைகளாய் மறுவாழ்வைத் துவங்க, மற்றொரு அத்தியாயமொன்று மக்கா மணலில் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.
தீயாய்ப் பரவிய இச்செய்தி நாலாதிசையிலும் பரவி குதைதில் இருந்த ஸுராக்காவையும் அடைந்தது. "வேறென்ன அத்தாட்சி வேண்டும்? இன்னம் எதற்குக் காத்திருக்க வேண்டும். இவர் நபி! ஏக இறைவனின் இறுதி நபி! செல்வோம், ஏற்போம், இணைவோம்" என்று புறப்பட்டார் ஸுராக்கா இப்னு மாலிக் ரலியல்லாஹு அன்ஹு. கிளம்புமுன், ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகளுக்குமுன் பாலை வெளியில் நபியவர்களிடமிருந்து எழுத்தில் பெற்றுக்கொண்ட வாக்குறுதியையும் மறக்காமல் எடுத்துக் கொண்டார்.
அப்பொழுது ஜிஃரானா பகுதியில் இருந்தார்கள் நபியவர்கள். இதர தோழர்கள் சூழ ஒட்டகத்தின்மேல் அமர்ந்து சவாரித்துக் கொண்டிருந்தார்கள் முஹம்மது நபி. அப்பொழுது வேகமாய் யாரோ ஒருவர் முஹம்மது நபியை நோக்கி முன்னேறுவதைக் கண்டு, தோழர்களின் ஈட்டிகளின் பின்புறம் எச்சரிக்கை உணர்வுடன் அவரை இடித்துத் தடுத்தன. "பின்னால் போ, பின்னால் போ, என்ன வேண்டும் உனக்கு?" என்று தோழர்கள் தடுத்து நிறுத்த முயல, அதற்கெல்லாம் அசரவில்லை ஸுராக்கா. அனைவரையும் தள்ளிக்கொண்டு நபியவர்களை நெருங்கிவிட்டார். ஒட்டகத்தின்மேல் இருந்த நபியவர்களிடம், தம்மிடமிருந்த வாக்குறுதிப் பிரமாணத்தைக் கைகளில் ஏந்தி உயர்த்திக் காட்டி, உரத்துக் கூவினார், "அல்லாஹ்வின் தூதரே, நான்தான் ஸுராக்கா இப்னு மாலிக். இதோ தாங்கள் எனக்கு எழுதி அளித்த வாக்குறுதி"
அவரை நன்கு அடையாளம் தெரிந்துகொண்டு, அன்புடன் வரவேற்றார்கள் நபியவர்கள். "அருகே வா ஸுராக்கா! உனக்களிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேறும் நாள் இது. கருணை உன்மேல் பொழியும் நாள் இது"
நபியவர்களிடம் கலிமா பகர்ந்து இஸ்லாத்தில் நுழைந்தார் ஸுராக்கா. அனைவருக்கும் ஏராளமாய்ப் பொருட்செல்வம் வழங்கப்பட்டதைப்போல் ஸுராக்காவுக்கும் ஏராளமாய் அளிக்கப்பட்டது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நபியவர்களின் இவ்வுலக வாழ்வு முடிவிற்கு வந்தது. மாபெரும் சோகமொன்று ஸுராக்காவையும் சூழ்ந்தது. தாம் ஒருகாலத்தில் அந்த உத்தம நபியை கொல்வதற்காகக் கிளம்பிய செயலை நினைத்து நினைத்து சொல்லமாட்டாத் துக்கம் பொங்கும். "கேவலம் ஒரு நூறு ஒட்டகங்களுக்காக அந்த உத்தமரைக் கொல்ல நினைத்தேனே, உலகத்திலுள்ள அத்தனை ஒட்டகங்களையும் மதிப்பிட்டாலும் அவரது நகத்துணுக்கிற்கு ஈடாகுமா?" என்று எண்ணிக் கொள்வார்.
இறுதியில் நபியவர்களின் தீர்க்கதரிசன வார்த்தைகளும் நினைவிற்கு வரும், "குஸ்ரூவின் கடகங்கள் உன் கரங்களை அலங்கரிக்கப்போவதை கற்பனை செய்து கொள் ஸுராக்கா" எப்படி அது முடியும்? எப்படி அது சாத்தியம்? ஆனால் அது நடக்கும் என்று அவரது உள்மனம் மட்டும் சர்வ நிச்சயமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தது.
* * * * *
அடுத்து அபூபக்ரு ரலியலலாஹு அன்ஹு முதலில் கலீஃபாவாக பொறுப்பேற்றுக் கொண்டதும் புறப்பட்டது முஸ்லிம்களின் படை. பாரசீகத்தின் வாசலைத் திறந்து வேகமாய் உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். சிறிது சிறிதாக முஸ்லிம்கள் வசமாக ஆரம்பித்தது பாரசீகம். அதற்கடுத்து உமர் அல்கத்தாப் ரலியல்லாஹு அன்ஹுவின் காலத்தில் மேலும் வீரியத்துடன் போர் நடைபெற ஆரம்பித்தது. முஸ்லிம்களின் படை சூறாவளியாய்ப் பாரசீகத்தில் நுழைய, கோட்டைகளும் எதிரிப் படைகளும் எதேச்சாதிகார ஆட்சியாளர்களும் தகர்க்கப்பட்டு, அந்தப் பேரரசு ஒரு முடிவிற்கு வர ஆரம்பித்தது.
உமர் அல்கத்தாபின் காலத்தில் பாரசீகர்களுடன் நடைபெற்ற போர்களில் வெகு முக்கியமான ஒன்று அல்-காதிஸிய்யாப் போர். ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு நிகழ்வுற்ற அப்போர் இஸ்லாமிய வரலாற்றின் அதிமுக்கியப் போர்களில் ஒன்று. பாரசீகப் படைகளுக்கு எதிராக ஸஅத் பின் அபீ வக்காஸ் ரலியல்லாஹு அன்ஹு தலைமையில் படையொன்றை அனுப்பி வைத்தார் உமர். காதிஸிய்யாவில் நான்கு நாட்கள் நடைபெற்ற அப்போர் படு உக்கிரம். தோழர்கள் அப்போரில் பறை சாற்றிய வீரம் அசாத்தியமானது. நாமெல்லாம் அவசியம் படித்துணர வேண்டிய சுவையான வீர வரலாறு அது. அப்போரில் முஸ்லிம்கள் மிகத் தெளிவான வெற்றியை அடைந்தனர். அவர்களின் வசம் ஏராளமான பொருட் செல்வம் வந்து சேர்ந்தது.
வெற்றிச் செய்தியையும் அரசாங்கக் கருவூலத்திற்குச் சேரவேண்டிய ஐந்தில் ஒரு பங்கையும் மதீனாவிற்கு அனுப்பிவைத்தார் ஸஅத். உமரின் எதிரே அவை குவிக்கப்பட்டன. திகைப்புடன் அதை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தார் உமர். குஸ்ரூவின் தங்கக் கிரீடம்! அதில் பதிக்கப்பட்டிருந்த முத்து சிரித்தது. அவனது ஆடைகள் தங்க இழைகளால் நெய்யப்பட்டிருந்தன. அவனது கச்சை தகதகவென உயர் ரகக் கற்களால் மின்னியது. விலைமதிப்பற்ற அவனது கடகங்கள், மற்றும் எண்ணற்ற விலையுயர்ந்த பொருள்கள் என்று அனைத்தும் பரப்பிக் கிடந்தன.
தொடக்கூட இல்லை, தன்னிடம் எப்பொழுதும் இருக்கும் பிரம்பினால் அந்தச் செல்வக் குவியல்களைக் கிளறிப் பார்த்தார் உமர். திரும்பி, தன்னுடன் இருந்த தோழர்களிடம், "இந்தளவு செல்வத்தைச் சரியான முறையில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கும் மக்கள் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள்"
அங்கு அலீ ரலியல்லாஹு அன்ஹுவும் இருந்தார். "தாங்கள் செல்வத்தின்மீது சிறிய ஆசையோ பேராசையோ கொள்வதில்லை. எனவே உங்கள் குடிமக்களும் பேராசைக்கு அப்பாற்பட்டவர்களாய் இருக்கிறார்கள். தாங்கள் அதை அனுபவிக்கும் எண்ணம் கொண்டவராய் இருந்திருந்தால் அவர்களும் அப்படியே ஆகிவிட்டிருப்பார்கள்"
அவர்கள் அனைவரின் மேன்மையறிய இந்த வாக்கியம் போதாது?
அங்குக் குழுமியிருந்த மக்கள் மத்தியில் ஸுராக்கா இப்னு மாலிக் இருந்தார். "இங்கே வாரும்" என்று அவரை அழைத்தார் உமர். குஸ்ரூவினுடைய ஆடை, மேலங்கி, ஆகியனவற்றை அணிந்து கொள்ளச் சொன்னார். "இதோ விலையுயர்ந்த அவனது காலணி, இட்டுக் கொள்ளுங்கள்" வாளைச் செருகி வைத்துக் கொள்கின்ற இடுப்புக் கச்சை இருந்தது. அதை அவரே எழுந்து ஸுராக்காவிற்கு அணிவித்தார். பின்னர் பாரசீக வல்லரசின் சக்கரவர்த்தி, பராக்கிரம அரசன் குஸ்ரூவின் கிரீடம் ஸுராக்காவின் தலையினில் சூட்டப்பட்டது. இறுதியில் அவனது கடகங்கள் அவரது கையில் அணிவிக்கப்பட்டன.
களிப்புடன் ஸுராக்காவையே பார்த்துக் கொண்டிருந்த உமர் அவரை முன்னும் பின்னும் நடக்கச் சொல்லி வேடிக்கை பார்த்தார். "சபாஷ்! முத்லஜ் குலத்தைச் சேர்ந்த நமது பதுஉச் சகோதரர்,  பாரசீகச் சக்ரவர்த்தி குஸ்ரூவின் கிரீடத்தையும் கடகங்களையும் பூண்டுள்ள இந்நாள் எத்தகைய நன்னாள். ஸுராக்கா இதனைப் பூண்டுள்ள உமக்கும் உம்முடைய கோத்திரத்து மக்களுக்கும் இது எத்தகைய நற்பேறு"
முஸ்லிம்கள் குரல் பொங்கி எழுந்தது, "அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்"
"போதும், அவற்றைக் களையுங்கள் ஸுராக்கா"
கூறிவிட்டு விண்ணை நோக்கித் தனது கைகளை உயர்த்தி இறைஞ்சினார் உமர், "யா அல்லாஹ்! என்னைவிட மிக உயர்ந்தவரும் உனது அன்பிற்கும் கனிவிற்கும் பாத்திரமான உன் தூதர் வசம் இந்தச் செல்வம் வந்தடைய நீ நாடவில்லை. அடுத்து வந்த அபூபக்ரு! அவரும் என்னைவிட மிக உயர்ந்தவர், அவர் வசமும் இந்தச் செல்வம் வந்தடைய நீ நாடவில்லை. இப்பொழுது இவற்றை எனது ஆட்சியில் அருளியிருக்கிறாய். நீ அதை எனக்கு ஒரு தண்டனையாக ஆக்கிவிடாமல் இருக்க உன்னிடமே பிரார்த்திக்கிறேன்"
அழுதார் உமர். கூடியிருந்தவர்கள் அவர்மேல் இரக்கம் கொள்ளுமளவிற்கு அழுதார். அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃபை அழைத்து, "இன்று மாலைக்குள் இவை அனைத்தையும் விற்றுவிட்டு அதனை முஸ்லிம்களுக்குப் பகிர்ந்து அளித்துவிட வேண்டும்" தனக்கென்று அதில் பங்கு எதுவுமே தேவையில்லை என்பதையும் உறுதிபட அறிவித்தார் உமர்.
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்குமுன் நபியவர்கள் அறிவித்த முன்னறிவிப்பு அட்சரம் பிசகாமல் அன்று அங்கு நிறைவேறியது! தீர்க்கதரிசனம் மெய்யானது! அந்த திருப்தியை நெஞ்சில் சுமந்து, உடம்பில் சுமந்திருந்த செல்வச் சுமையை கழட்டிக் கொடுத்தார் ஸுராக்கா இப்னு மாலிக்.
ரலியல்லாஹு அன்ஹு!

அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ (ரலி)


ஹிஜ்ரி 6ஆம் ஆண்டு, ஜமாதுல் ஆகிர் மாதம்.  ஸைத் இப்னு ஹாரிதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அழைத்தார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஸைத் இப்னு ஹாரிதாவின் தலைமையின்கீழ் 170 பேர் கொண்ட படைக்குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டது.
 எதற்கு?
சேர்த்து வைத்த செல்வம், குடியிருந்த இல்லம், கூடிக்குலாவிய சொந்தம் என மக்காவிலிருந்த அத்தனையையும் துறந்து புலம்பெயர்ந்து வந்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்னும் அத்துணைத் தொலைவிலிருந்து புறப்பட்டு மதீனாவரை வந்து, முஸ்லிம்கள்மீது ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்த்தப்படும் போர்களால் முஸ்லிம்களின் நிம்மதியைக் குரைஷிகளால் குலைக்க முடிகிறதென்றால் ... அவர்களிடம் செழித்துக் குலுங்கும் செல்வ வளம்தானே! அதை மட்டுப்படுத்த வேண்டும்.  ஸாரியா உருவானது."சிரியாவிலிருந்து மக்காவிற்குத் திரும்பும் குரைஷிகளின் வணிகக் கூட்டத்தைக் கண்டால் அவர்களை வழிமறித்து முறியடியுங்கள். அவர்களது பொருட்களைக் கைப்பற்றுங்கள்" கட்டளையொன்று இடப்பட்டது!
கிளம்பிச் சென்ற அந்தப் படையினர், சிரியா-மக்கா பாதையில் காத்திருக்க ஆரம்பித்தனர். பெரும் வணிகக் குழுவொன்று வெற்றிகரமாய் சிரியாவில் ஏற்றுமதி வியாபாரம் முடித்து, நூறு ஒட்டகங்கள், நூற்று எழுபது சேவகர்கள் என்று கொழுத்த பொருட்செல்வத்துடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தது - வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல். சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றித் திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடம் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
மதீனா நகரம். மறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு, தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.
"அல்லாஹு அக்பர்!" முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்புறம் பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலித்தது.
"அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்குப் பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்படி கேட்டுக் கொள்கிறேன்"
ஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது!
* * * * *
அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ மக்காவிலுள்ள அப்துஷ் ஷம்ஸ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். செல்வந்தக் குடும்பம், உயர்குலம் என்ற பின்புலம்.
நபியவர்களின் முதல் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹாவின் சகோதரி ஹாலா பின்த் குவைலிதின் மகன்தான் அபுல் ஆஸ். தன் சகோதரியின் மகனைத் தம் சொந்த மகனாகவே பாவித்தார் அன்னை கதீஜா. மிகுந்த பாசம், அக்கறை, கனிவு. பின்னர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கதீஜாவின் கணவராய் அமைய, அந்த அத்தனையும் நபியவர்களிடமிருந்தும் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது.
முஹம்மது நபி, அன்னை கதீஜா தம்பதியருக்கு ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா ஆகியோர் பெண்மக்கள். இவர்களுள் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மூத்த மகள். வளர்ந்து வாலிப வயதை அடைந்த ஸைனபை மணமுடிக்க மக்காவிலுள்ள தலைவர்களின் மகன்களுக்கு ஏகப்பட்ட ஆர்வம், பலத்த போட்டி. முஹம்மது நபியின் வம்சாவழியும் சரி, கதீஜா பின்த் குவைலித் அவர்களின் வம்சாவழியும் சரி, மிகவும் பெருமை வாய்ந்தது. அத்தகைய குலத்தில் தோன்றிய அழகிய, நற்குணமுள்ள பெண்ணை மணப்பதில் போட்டியில்லாமல் எப்படி?
ஆனால் அந்த வாய்ப்பு கதீஜாவின் சகோதரி மகன் அபுல் ஆஸிற்குக் கிடைத்தது. பெருந்தன்மை, மரியாதை, வீரம், வாய்மை ஆகிய அனைத்தும் ஒருங்கே நிறைந்தவர் அபுல் ஆஸ். துணிவு, விசுவாசம், தன்முனைப்பு எல்லாம் மிக அதிகம். இப்படியொரு அருமையான மாப்பிள்ளை சொந்தத்திலேயே இருக்க வெளியில் எதற்கு என்று அவரையே தன் மருமகனாக்கிக் கொண்டனர் நபிகள் நாயகம்-கதீஜா தம்பதியினர்.
அபுல் ஆஸ்-ஸைனபின் இல்லற வாழ்க்கை சிறப்பாய்த் துவங்கியது. ஆனந்தமாய்த் தொடர்ந்தது.
சில ஆண்டுகள் கழிந்திருக்கும். நல்லதொரு இரவில் மக்காவிலுள்ள மலைக்குகைக்குக்கு வானவர் தலைவர் வந்து செய்தி அறிவிக்க, அது மெல்ல நகருக்குள் பரவியது.
"ஒரே இறைவனாம், வேறொன்றும் இல்லையாம்! இவர் அந்த இறைவனின் தூதராம்" என்று நபித்துவ செய்தி மக்காவின் வீதிகளிலும் வீடுகளிலும் பெரும் பேச்சாகிப் போனது. முதலில் தன் வீட்டாரிடம்தான் அந்த ஏகத்துவச் செய்தியை அறிவித்தார்கள் முஹம்மது நபியவர்கள். அதை அப்படியே, உடனே ஏற்றுக் கொண்டார் அவரின் மனைவி கதீஜா ரலியல்லாஹு அன்ஹா. அவர்களின் மகள்கள் ஸைனப், ருகைய்யா, உம்மு குல்தூம், ஃபாத்திமா - ரலியல்லாஹு அன்ஹுன்ன - அவர்களுக்கும் ஏதும் பிரச்சனை இருக்கவில்லை. அனைவரும் ஏற்றுக் கொண்டனர். முழுக்க முற்றிலும் தங்களின் தலைவனை அறிந்திருந்தது அந்தக் குடும்பம்.
இந்தச் செய்தியை நபியவர்களின் மூத்த மருமகன் அபுல் ஆஸினால் மட்டும் ஜீரணிக்க இயலவில்லை. காலங்காலமாய் வழிபட்டுவரும் மூதாதையர்களின் சமயத்தையும் சிலைகளையும் சம்பிரதாயங்களையும் உடனே அவரால் தூக்கி எறிய முடியவில்லை.
தன் மாமனார் முஹம்மது அவர்களின்மேல் அளப்பரிய மதிப்பும் மரியாதையும் நம்பிக்கையும் இருந்ததுதான். அவர்களது நேர்மை வாக்குச்சுத்தம் ஆகியனவற்றில் குறையென்று எதுவுமே சொல்ல முடியாதுதான். அப்பழுக்கு இல்லாத உத்தமர் என்பதும் நிதர்சனமான உண்மையே. ஆனால் அவை அத்தனையையும் மீறி அபுல் ஆஸிற்குத் தனது குலவழக்கம் பெரிதாய்த் தோன்றியது. அதைவிட்டு வெளிவர அவரது மனம் ஒப்பவில்லை.
இறைச்செய்தி வந்து இறங்க இறங்க, மக்காவில் இஸ்லாத்தின் மீளெழுச்சிப் பிரச்சாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. குரைஷிகளால் முஸ்லிம்களுக்கு ஓயாத குடைச்சல், துன்புறுத்தல் என்று நாளுக்குநாள் போராட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆனால் இஸ்லாமிய வீரியம் குறைவதாயில்லை. அன்றிலிருந்து வரலாற்றைச் சற்றுக் கவனித்தால் பிரச்சனைகளும் சோதனைகளும் அதிகரிக்கும்போதுதான் இஸ்லாம் மேலும் வலுவடைந்து பரவலடைவதை அறிய முடியும். அது இறைவிதி போலும். அடுத்து என்ன செய்யலாம் என்று குரைஷிகள் ஒன்று கூடித் திட்டமிட்டார்கள்.
"நம் மகன்கள் அவரின் மகள்களைத் திருமணம் புரிந்து கொண்டு இல்லறம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முஹம்மது உத்தமர்தான். ஆனால் நமக்கு விரோதியாகிவிட்டார். அப்புறம் என்ன சம்பந்தம் வேண்டியிருக்கிறது? இவருடையப் பிரச்சார வேகத்தை மட்டுப்படுத்தி தடுக்கவேண்டுமென்றால் அவருக்குக் குடும்பக் கவலையை அதிகப்படுத்த வேண்டும். நம் மகன்கள் அவருடைய மகள்களை விவாகரத்து செய்யட்டும். தன் மகள்களின் எதிர்காலம் பற்றிய கவலை அவருக்கு ஏற்படும். அது அவரைத் திசை திருப்பிவிடும்"
ஏதாவது செய்து முஹம்மது நபியைத் தண்டிக்க வேண்டும், அவர் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற ஆத்திரம் மட்டுமே அவர்களுக்கு மேலோங்கியிருந்தது. "சபாஷ்! இது உருப்படியான யோசனை" என்று குதித்து எழுந்தது அக்குழு.
நபியவர்களின் சிற்றப்பனும் இஸ்லாத்தின் கொடிய விரோதியுமான அபூலஹபிற்கு உத்பா, உதைபா என்று இரு மகன்கள். அவர்கள் இருவருக்கும் முறையே நபியவர்களின் மகள்கள் ருக்கையா, உம்மு குல்தூம் ஆகியோர் மணமுடித்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் உம்மு குல்தூம் மிகவும் இளவயதுடையவராதலால் உதைபாவுடன் சேர்த்து வைக்கப்படாமல் பெற்றோர் இல்லத்தில் வசித்து வந்தார்.
அபூலஹபின் மகன்களிடம் தங்களது திட்டத்தைத் தெரிவித்தது அக்குழு. அதை ஏற்பதில் அவர்களுக்குத் துளியும் சங்கடம் இருக்கவில்லை. "நல்ல யோசனை சொன்னீர்கள். அப்படியே செய்வோம்" என்று அபூலஹபின் நல்லாசியுடன் பெருமகிழ்ச்சியாய் அத்திருமணங்கள் முறிக்கப்பட்டன.
உத்பாவிற்கு ஸயீத் இப்னுல் ஆஸ் என்பவன் தன் மகளை "இந்தா என் மகள்" என்று மணமுடித்துக் கொடுத்தான். அடுத்து அபுல் ஆஸ் பின் அர்ரபீஉ இடம் சென்றது அக்குழு.
"அபுல் ஆஸ்! நமது பிரச்சனைகளெல்லாம் உனக்குத் தெரியும். உன் மாமனார் ஆரம்பித்துள்ளாரே பிரச்சாரம், அது மக்காவின் நிம்மதியையே குலைத்துவிட்டது. அவருக்குப் பாடம் புகட்டி அவரைத் தடுத்து நிறுத்த நாங்கள் எளிதான திட்டம் வைத்திருக்கிறோம். உன் மனைவி முஹம்மதுவின் மூத்த மகள். அவரை விவாகரத்து செய்துவிடு. பயப்படாதே, அதற்குப் பதிலாய் குரைஷிகளிலேயே மிகச் சிறந்த வேறு தலைவரின் மகள் யார் வேண்டுமென்று கைகாட்டு, எந்த அழகி வேண்டுமென்று சொல், உடனே உனக்கு மணமுடித்து வைக்கிறோம்"
அதிர்ந்துவிட்டார் அபுல் ஆஸ்! அவருக்குத் தன் மனைவியின் மீது அளவற்ற பாசமும் நேசமும் இருந்தது. 'மாமனார் நிகழ்த்திவரும் இஸ்லாமியப் பிரச்சாரம் எனக்கு உவப்பில்லைதான். அதற்காக?'
"அதெல்லாம் முடியாது! சத்தியமாக முடியாது! விவாகரத்து என்ற பேச்சிற்கே இடமில்லை. உலகிலுள்ள எந்தப் பேரழகியை நீங்கள் எனக்குப் பகரமாகத் தருவதாக இருந்தாலும் சரியே, இதெல்லாம் நடக்காது" என்று மிகத் திட்டவட்டமாக அந்தக் குரைஷிகளிடம் தெரிவித்துவிட்டார் அபுல் ஆஸ்.
ருகைய்யா மட்டும் தாய் வீடு திரும்பினார். ஆனால் இந்த நிகழ்வு நபியவர்களுக்கு வருத்தத்திற்குப் பதிலாய் நிம்மதியையே அளித்தது. பலதெய்வ உருவ வழிபாடு நிகழ்த்துபவர்களிடம் தம் மகள்கள் மனைவியராக இருப்பதில் நபியவர்களுக்குச் சங்கடம் இருந்து கொண்டேயிருந்தது. அத்தருணத்தில் அத்தகைய திருணம முறிவு பற்றிய சட்டமும் இறங்கியிருக்கவில்லை. நபியவர்களும் மகள்களிடம் கணவர்களைப் பிரிந்து வந்துவிடுமாறு வற்புறுத்த இயலாத நிலையில் இருந்தார்கள். இந்நிலையில் குரைஷியரின் திட்டம் முஹம்மது நபிக்கு சாதகமாக ஆகிப்போனது. இதைப்போல் அபுல் ஆஸும் ஸைனபை விவாகரத்து செய்துவிட்டால் நல்லதுதான் என்ற விருப்பம் அவர்களுக்குத் தோன்றியது.
காலம் நகர்ந்து கொண்டிருந்தது. மக்காவில் இருந்து கொண்டு அதற்குமேல் ஏதும் தாங்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட, ஹிஜ்ரத் நிகழ்ந்தது. வரலாற்றின் விறுவிறுப்பான அடுத்த பாகம் மதீனாவில் துவங்கியது.
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு போருக்குக் கிளம்பி வந்தது குரைஷியர் படை. பத்ரில் முதல் யுத்தம் நிகழ்ந்தது. அந்த யுத்தமே தனிப்பல அத்தியாயங்கள் அடங்கிய மாபெரும் நிகழ்வு. நாம் சுருக்கமாய் அதை ஆங்காங்கே தொட்டுக் கடந்து செல்வோம்.
குரைஷிக் குலத்தின் முக்கியத் தலைவர்கள் படையெடுப்பில் கிளம்பி வந்திருந்தார்கள். ஒவ்வொரு குலத்திலிருந்தும் பெருந்தலைகள் கலந்து கொண்டதால் அபுல் ஆஸிற்கு அந்தக் கட்டாயம் ஏற்பட்டது.  ஏனெனில் அவரது குலக் குழுவிற்கு அவர் தலைமைப் பொறுப்பில் இருந்ததார். தனிப்பட்ட முறையில் அவருக்கு முஸ்லிம்கள்மேல் விரோதமில்லை என்றாலும் உடன்பாட்டிற்குக் கட்டுப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  வேறுவழியில்லை, கலந்து கொண்டார்.
இறுதியில் பத்ருப் போர் குரைஷிகளுக்குப் படுதோல்வியில் முடிந்தது. ஆயிரக்கணக்கான எதிரிகளை, சில நூறு வீரர்கள் அடங்கிய முஸ்லிம் படை சுருட்டி வீசியது. சில முக்கியக் குரைஷித் தலைவர்கள் கொல்லப்பட்டனர். பலர் சிறைபிடிக்கப்பட்டனர். சிறைபிடிக்கப்பட்டவர்களில் முக்கியமான குலக்குழுவின் தலைவர் ஒருவர் இருந்தார் - அபுல் ஆஸ்.
முதல் போர், முழு வெற்றி. அப்பொழுது போரில் சிறைபிடிக்கப்பெற்ற கைதிகள் பற்றிய சட்டம் வெளியாகி இருக்கவில்லை. முஹம்மது நபி, தோழர்களுடன் கலந்து ஆலோசித்தபின் முடிவாகியது, 'பிணையத் தொகை பெற்றுக் கைதிகளை விடுவிக்கலாம்' கைதியின் வசதி, அந்தஸ்து, செல்வாக்கு ஆகியனவற்றைப் பொருத்து ஆயிரம் திர்ஹத்திலிருந்து நாலாயிரம் திர்ஹம்வரை பிணையத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.
அதற்குப் பகரமாய் மற்றொரு சலுகையையும் நபியவர்கள் அறிவித்தார்கள். கைதிகளில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களிடம், "நீ முஸ்லிம்களின் பிள்ளைகளுக்கு எழுத, படிக்கக் கற்றுத் தந்தால் போதும். உனக்கு பிணையத் தொகை விலக்கு" என்று தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகம் கல்வியில் சிறக்க வேண்டுமென்ற அபரிமிதமான அக்கறை இருந்தது நபியவர்களுக்கு. "ஓதுவீர்!" என்ற இறை அறிவிப்பில் துவங்கிய மார்க்கமல்லவா? அதனால் கல்வி என்பதெல்லாம் இச்சமூகத்திற்குப் பொழுது போக்கு அம்சமல்ல. அதை நாம் முழுதும் உணர வேண்டியது அவசியம், மிக அவசியம்.
மக்காவிலிருந்து அவரவரும் தத்தமது கணவன், மகன், தகப்பன் என்று போரில் பிடிக்கப்பெற்றவர்களை விடுவிக்க பணத்துடன் மதீனாவிற்கு ஆளனுப்பிக் கொண்டிருந்தனர். ஸைனப் ரலியல்லாஹு அன்ஹா மக்காவில் இருந்தார். தம் கணவர் பிடிபட்ட செய்தி அவருக்கும் கிடைத்தது. கணவரை விடுவிக்க பணமும் கழுத்து ஆபரணம் ஒன்றையும் கொடுத்தனுப்பினார். அது, அன்னை கதீஜா தம் மகளுக்குத் திருமணத்தின்போது பரிசளித்த நகை.
தாயின் சீதனம் தந்தையை வந்தடைந்தது. அந்த நகையைக் கண்ட தூதுவர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முகத்தில் சோகமும் வேதனையும் படர்ந்தன. தன்னுடைய முதல் மனைவியின் மீதும் மகளின் மீதும் அபாரப் பாசம் கொண்டிருந்தவர்கள் அவர்கள். தம் அளவிலாப் பாசத்திற்குரிய மனைவியின் கழுத்தை அலங்கரித்திருந்த அதே கழுத்தணி, பிணைய மீட்புத் தொகையாக வந்தது அவர்களுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை அளித்தது!
தம் தோழர்களை நோக்கித் திரும்பி, "ஸைனப் தம் கணவன் அபுல் ஆஸை மீட்க இந்தப் பணமும் நகையும் கொடுத்து அனுப்பியுள்ளார். இந்த மீட்புத் தொகையைப் பெறாமல் அவரை விடுவிப்பதில் உங்களில் எல்லாருக்கும் உவப்பிருந்தால் நீங்கள் அப்படிச் செய்யலாம்"
"விடுவியுங்கள் அவரை" என்று ஒரு கட்டளை இட்டிருந்தாலே சிரமேற்கொண்டு செய்திருப்பார்கள் தோழர்கள். ஆனால் நபியவர்கள் எவருடைய உரிமையையும் மீற முன்வந்ததே இல்லை, அது தமக்கான தேவையாய் இருந்த போதிலும்கூட. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
"அப்படியே செய்கிறோம் அல்லாஹ்வின் தூதரே, தாங்கள் மனம் வருந்த வேண்டாம்" என்றவர்கள் உடனே அபுல் ஆஸை அழைத்து "உங்களுக்கு விடுதலை. நீங்கள் மக்காவிற்குப் போகலாம்" என்று அறிவித்துவிட்டார்கள். விடுதலையானார் அபுல் ஆஸ்.
அவர் மக்காவிற்குக் கிளம்பும்முன் அவரைத் தனியாக அழைத்துப் பேசினார்கள் நபியவர்கள். என்ன உரையாடினார்கள் என்பதைப் பற்றி நேரடியான குறிப்புகள் இல்லை. எனினும் அது என்னவாயிருக்கும் என்பதை அடுத்து நடந்த நிகழ்வுகள் புலப்படுத்தின.
ஸைத் இப்னு ஹாரிதாவையும் மற்றொரு அன்ஸாரித் தோழரையும் அழைத்து முக்கியப் பணியொன்று அளித்தார்கள் முஹம்மது நபி. "யாஜாஜ் சென்று நீங்கள் இருவரும் காத்திருக்கவும். என் மகள் ஸைனப் வருவார். அவரைப் பத்திரமாக மதீனா அழைத்து வரவும்" யாஜாஜ் என்பது மக்காவிலிருந்து சுமார் எட்டு மைல் தொலைவில் இருக்கும் ஓர் ஊர். தோழர்கள் அங்குச் சென்று காத்திருக்க, அபுல் ஆஸ் ஸைனப் ரலியல்லாஹு அன்ஹாவை மக்காவிலிருந்து அங்கு இட்டுச் சென்று விட்டுவிட வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது.
பத்ருப் போர் முடிந்து ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப் பிறகு மக்கா வந்தடைந்தார் அபுல் ஆஸ். பயணக் களைப்பையெல்லாம் குளித்து முடித்துத் தீர்த்திருக்க வேண்டும். பிறகு ஸைனபிடம் நடந்ததை விவரித்து, "பயணத்திற்குத் தயாராகு. உன்னை அழைத்துச் செல்ல உன் தந்தையின் தோழர்கள் நகருக்கு வெளியே காத்திருக்கின்றனர்"
கணவனைப் பிரிந்து தந்தையைச் சென்று அடைய உடனே தயாராக ஆரம்பித்தார் ஸைனப். இஸ்லாத்தில் உறவுகளுக்கு மிகச் சிறந்த உரிமை உண்டுதான். அதற்கான சட்டங்களும் இலக்கணங்களும் விவரிக்கப்பட்டும் இருக்கின்றன.  ஆனால் அவையெல்லாம் இறைவனையும் அவனுடைய தூதரையும் தாண்டி அமைவதில்லை. படைத்தவனுக்கே சகல உரிமை. படைக்கப்பட்டவர்களுக்கு அதன் பிறகே இதர உரிமை என்பது அடிப்படை விதி. அதை முழு முற்றிலும் உணர்ந்திருந்த முதல் தலைமுறை அவர்கள்.
தன் மனைவியின் பயணத்திற்குரிய ஏற்பாடுகளையும் உதவிகளையும் கவனிக்க ஆரம்பித்தார் அபுல் ஆஸ். இதனிடையே மற்றொரு சுவையான நிகழ்வொன்று நடந்தது! முந்தைய அத்தியாயங்களில் படித்தோமே ஹிந்த் பின் உத்பா, நினைவிருக்கிறதா? அவருக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு, மனதிற்குள் குறுகுறுப்பு. ஸைனபை யதேச்சையாய்ச் சந்தித்த அவர், "என்ன ... மதீனா செல்லும் ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்டதா, தயாரா?" என்றார். ஸைனப் தன் பயண ஏற்பாடுகளை இரகசியமாய் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஹிந்த் இப்படிக் கேட்டால்? அதுவும் பத்ருப் போரில் தன் தந்தை, சகோதரன், தந்தையின் சகோதரன் ஆகியோரை இழந்திருந்தவர் அவர்.
"இது சரியில்லையே, எனது நோக்கம், திட்டம் இதையெல்லாம் தெரிந்து கொள்ளத்தான் இப்படிக் கேட்டிருக்க வேண்டும். பின் என்ன? மூட்டை முடிச்சுகளை ஒட்டகத்தில் ஏற்றிவைத்து ஹிந்த் கையசைத்து வழியனுப்பி வைப்பாரா?" என்றெல்லாம் ஸைனப் மனதில் எண்ணம் ஓடியிருக்க வேண்டும்.
"இல்லையே!" என்றார் ஸைனப்.
ஆனால் ஹிந்த் விடவில்லை. "உனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் சொல், தயங்கவே வேண்டாம். நான் செய்து தருகிறேன். மதீனா நீண்ட தூரப் பயணம். அது உனக்கு எளிதாய் அமையவே நான் விரும்புகிறேன். பெண்கள் நமக்குள் இருக்கும் நட்பு தனி; ஆண்களுடைய பகைமையும் குரோதமும் தனி. எனவே அதையும் இதையும் முடிச்சுப் போட்டு நீ துன்பத்துக்குள்ளாகாதே!"
அத்தகைய கனிவான தேனொழுகும் வார்த்தைகளைக் கேட்ட ஸைனப் "நம்பிவிடலாமா" என்றுகூட நினைத்தார். "சொல்லிவிடலாமா?"ஆனால் முன்னெச்சரிக்கை முந்திக் கொண்டது. "நிச்சயமாக அப்படியான திட்டம் ஏதுமில்லை ஹிந்த்" என்று மறுத்துவிட்டார் ஸைனப்.
ஒட்டகம், பயணத்திற்குத் தேவையான இதரப் பொருட்கள் அனைத்தும் தயாராயின. தன் சகோதரன் அம்ரு பின் அர்ரபீஉவை அழைத்தார் அபுல் ஆஸ். "ஸைனபை மதீனா அழைத்துச் செல்ல நகருக்கு வெளியே என் மாமனாரின் தோழர்கள் காத்திருக்கிறார்கள். நீ அவர்களிடம் பத்திரமாய் இவரை ஒப்படைத்துத் திரும்பவும்" என்று அனுப்பி வைத்தார்.
அம்ரு பின் அர்ரபீஉ மிகத் தேர்ந்த வில்வித்தை வீரர். குறிதவறாது அம்பெய்தும் அவரது திறன் மக்கா மக்கள் மத்தியில் பிரசித்தம்.  தனது வில்லையும் அம்பையும் எடுத்துத் தோளில் மாட்டிக் கொண்டார் அம்ரு. ஸைனபை ஒட்டகத்தில் ஏறிக் கொள்ளச் சொன்னார். பட்டப்பகல் நேரமது. "கிளம்புங்கள்" என்று ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்து விட்டார்.
ஸைனப் மதீனா செல்லப் போகிறார் என்று நிச்சயமற்ற செய்தி பரவிக் கொண்டிருந்தது. இந்நிலையில் பட்டப்பகலில் தங்கள் கண்ணெதிரே அது நடைபெறுவதைக் கண்டு திகைத்துவிட்டனர் குரைஷிகள்! கோபமும் அவமானமும் தலைக்கேறிக் குதித்தார்கள். பத்ருப் போரில் கேவலமான முறையில் தோற்றுத் திரும்பி, அதன் காயம் யாருக்கும் ஆறாமல் அனைவரும் தத்தளித்துக் கொண்டிருந்த நேரம் அது. அதற்குக் காரணம் முஹம்மது. இப்பொழுது அவரின் மகள் படுஉரிமையுடன் மதீனா கிளம்பிச் செல்வதென்பது தங்களது கையாலாகத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் செயலாய் அவர்களுக்கு வலித்தது. எனவே பெரியதொரு கூட்டம் ஒட்டகம், குதிரை என்று அவர்களை துரத்திச் சென்றது.
தூ-துவா (Thu Tuwa) என்ற பகுதியில் அவர்களை எட்டிவிட்டனர். அவர்களில் ஹப்பார் இப்னு அல்-அஸ்வத் என்பவன்தான் முதலில் அவர்களை எட்டினான். தனது ஈட்டியைக் குறிபார்த்து எறிந்தான். அது நேராய் ஸைனப் அமர்ந்திருந்த் ஒட்டகத்தின் அம்பாரியைச் சென்று தாக்கியது. அப்போது சூலியாக இருந்தார் ஸைனப். அந்த அதிர்ச்சியில் கருச்சிதைவுற்று விட்டது. மற்றொரு குறிப்பு ஹப்பார், ஸைனபின் ஒட்டகத்தை மிரட்டி விரட்ட அதனால் அம்பாரியிலிருந்து தடுமாறி விழுந்த ஸைனபிற்கு கருச்சிதைவுற்று விட்டதாகக் குறிப்பிடுகிறது.
தங்களைக் குரைஷிகள் பின்தொடர்ந்து எட்டிவிட்டதைக் கண்ட அம்ரு பின் அர்ரபீஉ சுதாரித்துக் கொண்டார். உடனே தனது அம்புகளை தரையில் பரப்பிப் போட்டார் அவர். ஓர் அம்பை எடுத்து வில்லில் பூட்டி அறைகூவல் விட்டார், "இதோ பாருங்கள் மக்களே! சத்தியமாகச் சொல்கிறேன், யாராவது இவரை நெருங்கினீர்கள், இந்த அம்பு உங்கள் கழுத்தில் நுழைந்து பிடறியில் வெளிவரும்" ஒரு குழுவிற்கு எதிராய், தனியாளாய் வில் ஏந்தி நின்றிருந்தார் அம்ரு.
அது வீண்மிரட்டல் இல்லை என்பது குரைஷிகளுக்குத் தெரியும். மேற்கொண்டு எத்தகைய அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் நிச்சயம் சில குரைஷிகள் கொல்லப்படுவர் என்பது மட்டும் திடமாய்த் தெரிந்தது. எனவே சற்றுப் பின்வாங்கினர். இருந்தாலும் அவரை அப்படியே விட்டுவிட அவர்களும் தயாராயில்லை. அக்கூட்டத்தில் இருந்த அபூஸுஃப்யான்தான் அந்த நேரத்தில் சமயோசிதமாய் நிலைமையைச் சமாளித்தார்.
"மகனே! கொஞ்சம் நிதானமாகு, பேசுவோம்" என்று அம்ருவை நெருங்கினார். பிறகு தாழ்ந்த குரலில் பேசினார். "தவறான ஒரு வழியை நீ தேர்ந்தெடுத்துவிட்டாய் அம்ரு. இப்படிப் பட்டப்பகலில் எங்கள் எல்லோர் முன்னிலையிலும் நீ ஸைனபை அழைத்துச் செல்வது எங்களுக்கெல்லாம் சவால் விடுவது போலவல்லவா இருக்கிறது? அரேபியாவில் சகலரும் பத்ரில் நமக்கு ஏற்பட்ட அவமானத் தோல்வியை அறிந்துள்ளனர். அதை நமக்கு அளித்தது இவருடைய தந்தை முஹம்மது. இப்பொழுது அவரின் மகளை எங்கள் முன்னிலையில் நீ வெளியேற்றி அழைத்துச் சென்றால் அனைத்துக் கோத்திரத்தினரும் நம்மைப் படுகோழைகள் என்றே முத்திரை குத்திவிடுவார்களே! நமது குரைஷிக் குலச் செல்வாக்கும் மதிப்பும் காற்றில் பறந்துவிடுமே! அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருடைய கணவரிடம் விட்டுவிடு. ஓரிரு நாட்கள் கழியட்டும். நாம் இத்திட்டத்தை முறியடித்துவிட்டோம் என்று மக்கள் எல்லாரும் நம்பிவிடுவார்கள். பிறகு இரவோடு இரவாக யார் கண்ணிலும் படாமல் நீ ரகசியமாய் இவரை இவரின் தந்தையிடம் அனுப்பி வைத்துவிடு. ஏனெனில் இந்தப் பெண்ணை இவரின் தந்தையிடமிருந்து பிரித்துவைப்பதில் நமக்குப் பெரிய லாபம் ஏதுமில்லை"
குரைஷிகளின் அந்த அவலநிலை அம்ருக்குப் புரிந்தது. மாற்றுத் திட்டம் சரியெனப் பட்டது. ஸைனபை அழைத்துக்கொண்டு மக்கா திரும்பினார்.
இந்த நிகழ்வின் இரைச்சல் எல்லாம் அடங்கியதும் ஒருநாள் இரவு யார் கண்ணிலும் படாமல் ரகசியமாக அழைத்துச் சென்று யாஜாஜில் காத்திருந்த நபித் தோழர்களிடம் ஸைனபை ஒப்படைத்தார் அம்ரு. பத்திரமாய் அவரை மதீனாவிற்கு இட்டுச் சென்றனர் அவர்கள்.
ஸைனபைத் துரத்திச் சென்றவர்களைப் பிற்பாடு ஒருசமயம் ஹிந்த் சந்திக்க நேர்ந்தது. ஏகவசனத்தில் திட்டித் தீர்த்தார். "அமைதியான காலங்களில் - ஒரு பெண்ணிடம் - உங்கள் துணிவையும் வீரத்தையும் காட்டுஙகள். அதுவே போரென்றால் மாதவிடாயில் பலவீனமுற்ற பெண்களைப்போல் பம்மிவிடுஙகள்"
* * * * *
தன்னுடைய மருமகன் மீது ஏதோ ஒரு நம்பிக்கை நபியவர்களுக்கு இருந்திருக்க வேண்டும். அவரைப்போல் குணாதிசயம் கொண்ட நல்லவர் இஸ்லாத்தை நிராகரித்தவராகவே வாழ்க்கையைத் தொடர முடியாது என்பதை அவர்கள் யூகித்திருக்க வேண்டும் - அதனால்தானோ என்னவோ மதீனா திரும்பிய ஸைனபிற்கு மறுமணம் நிகழ்த்தாமல் வைத்திருந்தார்கள். ஸைனபும் தம் கணவர் அபுல் ஆஸ்மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
அங்கு மக்காவில் அபுல் ஆஸ் தனது தொழிலில் மூழ்கி வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். மக்காவிலிருந்த குரைஷிக் குலத்தினருக்கு வயல், தோட்டம், துரவு என்பதெல்லாம் இல்லை. அவர்களது பொருளாதாரம் வணிகம் மட்டுமே. குளிர்காலத்தில் யமன் நாட்டிற்கும் கோடைக் காலத்தில் சிரியாவிற்கும் வணிகக் கூட்டம் செல்லும். இங்கிருந்து பொருட்களை அங்குக் கொண்டு சென்று விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். பிறகு அங்கிருந்து பொருட்களைக் கொள்முதல் செய்து இங்குக் கொண்டு வந்து விற்பார்கள். மேலும் லாபம் கிடைக்கும். நவீன பாணியில் சொன்னால் ஏற்றுமதி-இறக்குமதி. பெரும் செல்வந்தர்கள் சுயமாய் அத்தொழில் செய்வார்கள். உதவி புரிய சம்பளத்திற்கும் கூலிக்கும் ஆட்கள், அடிமைகள் உண்டு. சிறு வியாபாரிகளாய் இருப்பவர்கள், திறமையான வணிக இளைஞர்களிடம் பொருள் ஒப்படைத்து பொறுப்பையும் ஒப்படைத்தால் அவற்றை விற்று லாபத்துடன் கொண்டு வந்து ஒப்படைப்பார்கள், அல்லது அவர்கள் வேண்டுகோள்படி அங்கிருந்து பொருள் வாங்கி வந்து அளிப்பார்கள். குரைஷிகளுக்குத் தங்களது வணிகத் தொழிலின்மேல் அபாரப் பிரியம் இருந்தது. வர்த்தகம் அவர்களுக்குப் பெருமை, செல்வம் எல்லாம் அளித்துக் கொண்டிருந்தது. குறைவே இல்லாமல் பெருகிக் கொண்டே வந்த பெருமையும் செல்வமும் ஸாரியாவினால் சடாரெனச் சரியப் போவதை குரைஷிகள் அப்போது அறிந்திருக்கவில்லை.
அபுல் ஆஸும் ஒரு சிறந்த வணிகர். சில சமயம் நூறு ஒட்டகங்கள் இருநூறு ஆட்கள் என்று அவரது வர்த்தகக்குழு பயணம் செய்யும். குரைஷியர் மத்தியிலும் அவருக்கு நற்பெயர் இருந்தது.  சிறுதொழில் வர்த்தகர்கள் அவரிடம் பணம் அளித்து முதலீடு செய்திருப்பார்கள். அந்த அளவு அவரது நாணயம், கூர்மதியின்மேல் நம்பிக்கை.
மதீனாவில் அரசியல் மாற்றங்கள் விறுவிறுவென நிகழ்ந்து கொண்டிருந்தன. இஸ்லாம் மேலும் மேலும் வலுவடைந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது முஸ்லிம்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். சிறுசிறு படையெடுப்புகள் பல அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. அரபு மொழியில் அவை, ஸாரியா என அழைக்கப்படும். அவற்றிற்குப் பற்பல காரணங்கள் இருந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று குரைஷியரின் வணிகக் கூட்டத்தைக் குறிபார்த்து நிகழ்த்தப்பெறும் படையெடுப்பு. அதன் நோக்கம் தெளிவானது. குரைஷியரின் பொருளாதார மேலான்மையை முறியடிப்பது. ஒருவகையில் பொருளாதார முற்றுகை.
முஸ்லிம்கள் மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகும் குரைஷியரின் பிரச்சனை அடங்குவதாய் இல்லை. படையெடுத்து வந்து இஸ்லாத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்க முயன்று கொண்டிருந்தார்கள். அதற்கெல்லாம் அவர்களுக்கு வலுவாய் உதவியது அவர்களது வணிகப் பொருளாதாரம். அதன் தெம்பில்தானே வாலாட்டுகிறார்கள்? அதை நறுக்கினால்? மக்காவிலிருந்து சிரியாவிற்குச் செல்லும் வழியில்தான் மதீனா அமைந்திருந்தது. எனவே குரைஷியரின் வலுவைத் தகர்க்க மிகவும் சமயோசிதமாய் வெற்றிகரமாய்ச் செயல்படுத்தப்பட்ட திட்டம் - ஆபரேஷன் ஸாரியா.
இப்படியான அரசியல் சூழ்நிலையில் கோடைக்காலம் ஒன்றில் தனது வணிகக் கூட்டத்துடன் சிரியாவிற்குக் கிளம்பினார் அபுல் ஆஸ். சென்ற வேலை நலமே முடிந்து நூறு ஒட்டகம், நூற்று எழுபது சேவகர்கள் என்று அவரது குழு திரும்பிக் கொண்டிருந்தது. வழியில் காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. சரியான தருணத்தில் எத்தகைய முன்னறிவிப்பும் இன்றி, திடீரென அவர்களைத் தாக்கியது முஸ்லிம்களின் படை. களத்தில் புகுந்து முஸ்லிம் வீரர்கள் தாக்குதல் தொடுக்க, போருக்கெல்லாம் தயாராக இல்லாத அவர்கள் விரைவில் சரணடைந்தனர். அத்தனை செல்வத்துடனுடன் அவர்களை முஸ்லிம்கள் கைப்பற்ற, அபுல் ஆஸ் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
முஸ்லிம்களிடமிருந்து தப்பிவந்து உட்கார்ந்தவர் ஆற அமர யோசித்தார். பெரும் இக்கட்டில் தான் மாட்டியுள்ளது புரிந்தது. தன் பொருள் தொலைந்த துக்கத்தைவிட மக்காவிலுள்ள குரைஷிகள் பலரது பொருட்களை இழந்திருந்தது அவருக்குப் பெரும் துக்கமாய்த் தோன்றியது. "வந்தார்கள், அனைத்தையும் கைப்பற்றிச் சென்றார்கள், நான் மட்டும் சமயோசிதமாய்த் தப்பித்துவிட்டேன்" என்று மக்காவுக்குச் சென்று பதில் கூறினால், "நல்லவேளை உயிர் பிழைத்தாயே" என்றெல்லாம் அவர்கள் உச்சி முகரப் போவதில்லை. எனக்கும் நபியவர்களுக்கும் உள்ள உறவினை முடிச்சுப் போட்டு, "இதில் ஏதோ சூட்சமம் உள்ளது. நீ எங்களது பொருட்களைச் சரியான வகையில் காப்பாற்றவில்லை" என்றுதான் தூற்றுவார்கள். இத்தனைநாள் பாதுகாத்துவந்த நாணயம் அடிபட்டுப் போகும். அவப்பேறு ஏற்படும். என்ன சொன்னாலும் அவர்கள் நம்பப் போவதில்லை. வேறு வழியிருக்கிறதா என்று மாய்ந்து மறுகி யோசித்தார். ஒரே ஒரு வழிதான் தோன்றியது. வெற்றிக்கு உத்தரவாதமில்லை. ஆனால் முயற்சி செய்யலாம் என்று தோன்றியது. எழுந்து மணலைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.
பகல் மறைந்து இருள் சூழ்ந்தது. மதீனாவிற்குள் யாருக்கும் தெரியாமல் நுழைந்தார் அபுல் ஆஸ். 'முஸ்லிம்கள் கண்ணில் பட்டால் தொலைந்தோம்' என்ற பயங்கரமான சூழல். ஒருவழியாக இருளில் ஸைனபின் வீட்டைத் தேடிக் கண்டுபிடித்தார். சந்தித்து நடந்ததையெல்லாம் விவரித்தார். தன்னுடைய உயிருக்கு அடைக்கலம் வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்க ஏற்றுக்கொண்டார் ஸைனப். அரபுகள் மத்தியில் அது வழமை. ஒருவருக்கு மற்றொருவர் அடைக்கலமோ பாதுகாப்போ நல்குவதாக ஒப்புக் கொண்டால் அவரைச் சார்ந்த இதர மக்களும் கோத்திரத்தினரும் அதை ஏற்றுக்கொள்வார்கள். அவரது உயிர் பாதுகாக்கப்படும்.
மறுநாள் வைகறை நேரம். வழக்கம்போல் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. நபிகள் நாயகம் பள்ளியை அடைந்தார்கள். இகாமத் சொல்லப்பட்டு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து நிற்க, நபியவர்கள் தொழுகையைத் துவங்கினார்கள்.
"அல்லாஹு அக்பர்!" முதல் தக்பீர் சொல்லப்பட்டுத் தொழுகை ஆரம்பமாக, அந்நேரம் பின்னாலிருந்த பெண்கள் பகுதியிலிருந்து அந்தக் குரல் ஒலி்த்தது.
"அனைவரும் கேட்டுக் கொள்ளுங்கள்! நான் முஹம்மதின் மகள் ஸைனப். அபுல் ஆஸ் பின் அர்ரபீஉக்கு பாதுகாப்பு அளிப்பதாய் நான் வாக்குறுதி அளித்துவிட்டேன். அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டு நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொள்கிறேன்"
ஆச்சரியகரமான அச்செய்தி நபியவர்களையும் மற்றவர்களையும் எட்டி இலேசான அதிர்வு படர, தொழுகை தொடர்ந்தது!
* * * * *
தொழுகை முடிந்ததும் முஹம்மது நபி மக்களை நோக்கித் திரும்பி, "நான் செவியுற்றதை நீங்களும் செவியுற்றீர்களா?" என்று கேட்டார்கள்.
"ஆம்!" என்று பதில் வந்தது.
"எவனுடைய கரத்தில் எனது உயிர் இருக்கிறதோ அவன்மீது ஆணையிட்டுச் சொல்கிறேன், இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அனைவரும் செவியுற்ற அதே நேரத்தில்தான் நானும் செவியுற்றேன்"
பிறகு கிளம்பி ஸைனபின் இல்லத்தை அடைந்த நபியவர்கள் தன் மகளிடம், "அபுல் ஆஸை கண்ணியத்திற்குரிய விருந்தாளியாகக் கவனித்துக் கொள்ளவும் ஸைனப். ஆனால் நீ அவருடைய மனைவியல்ல என்பதை இருவரும் நினைவில் கொள்ளவும்"
அதைக் கேட்டுக் கொண்ட ஸைனப் தன் தந்தையிடம் வேண்டுகோள் விடுத்தார், "இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைத் திரும்ப அளிக்க ஏதாவது வழியிருக்கிறதா? இப்பொழுது இவருக்கு அளிக்கும் கனிவு நலம் விளைவிக்கும் என்றே தோன்றுகிறது"
கனிவில் மிகைத்தவர் நபியவர்கள். முஸ்லிம்களின் நியாயமான கோரிக்கைகள் எதையும் அவர்கள் நிறைவேற்றாமல் இருந்ததில்லை. "இறைவனுக்கு மாறு புரியாமல் இருக்கிறதா, அவன் சட்டத்தை மீறாமல் இருக்கிறதா", அது போதும் அவர்களுக்கு. அதற்கடுத்து அந்தக் கோரிக்கையை மேற்கொள்வதில் அவர்களுக்கு சிரமம் இருந்ததில்லை. அப்படிப்பட்ட அவர்களிடம் தன் பிரியத்திற்குரிய மகள் கேட்டால்? ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. கைப்பற்றப்பட்டவை தம் முன்னாள் மருமகனின் முன்னாள் சொத்துகள். இப்போது முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை. அவர்களைக் கேட்காமல் எதுவும் செய்ய இயலாது.
வணிகக் குழுவையும் பொருட்களையும் கைப்பற்றியிருந்த படைப்பிரிவினரிடம் சென்றார்கள். "அபுல் ஆஸ் என் மருமகனாயிருந்தவர் என்பதைத் நீங்கள் அறிவீர்கள். அவருடைய பொருட் செல்வம் உங்கள் கைவசம் வந்துள்ளது. நீங்கள் விரும்பினால், தானமளித்து விடலாம் என்று கருதினால் பெருந்தன்மையுடன் அவருடைய பொருட்களைத் திருப்பித் தந்துவிடலாம். நான் மகிழ்வடைவேன்! ஆனால் படையெடுப்பில் நீங்கள் கைப்பற்றிய உங்கள் பகையாளியின் செல்வம் என்ற வகையில் என் கோரிக்கையை மறுக்க உங்களுக்கு சகல உரிமையும் உள்ளது"
எவ்வித வற்புறுத்தலும் அற்ற தெளிவான நேரான கோரிக்கை அது.
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அவற்றை அவருக்குத் திருப்பித் தந்து விடுகிறோம்" என்று எவ்வித ஆட்சேபமும் இன்றி பதிலளித்துவிட்டனர் தோழர்கள். தங்களின் தலைவர் உத்தம நபிக்காக உயிரையும் துறக்க வரிசைகட்டி நின்ற அவர்களுக்குப் பொருட் செல்வம் என்ன பொருட்டு?
தனது பொருள் அனைத்தும் திரும்பக் கிடைத்த செய்தி கேட்டதும் விரைந்து வந்தார் அபுல் ஆஸ். தோழர்கள் அவரிடம் சாந்தமாய்ச் சில விஷயங்களைப் பேசினார்கள், நினைவூட்டினார்கள்.
"அபுல் ஆஸ்! நீ குரைஷியர்களில் உயர் குலத்தைச் சார்ந்தவன். நபியவர்களின் மருமகனாய் இருந்தவன். அவர் முதல் மனைவியின் சகோதரி மகன். நீ ஏன் இன்னும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை? நாங்கள் உன்னிடம் கைப்பற்றிய அனைத்தையும் திருப்பித் தந்துவிடுகிறோம். நீ எங்களுடன் மதீனாவிலேயே தங்கிவிடு"
கைப்பற்றப்பட்டப் பொருள்கள் திருப்பி அளிக்கப்பட்டன. அனைத்துப் பொருள்களையும் ஒட்டகங்களையும் தன் சேவகர்களையும் பெற்றுக் கொண்டவர் மதீனாவில் தங்கவில்லை. உடனே மக்காவிற்குக் கிளம்பினார். அங்கு அவரை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள் அவருடைய வர்த்தக நண்பர்கள்.
வந்து சேர்ந்த அபுல் ஆஸ் அவரவருக்கு உரிய பணத்தையும் பொருளையும் வெகு கவனமாய் முறையாக ஒப்படைத்தார். அனைத்துக் கணக்கையும் முடித்தார். பிறகு கையை உதறி துடைத்துக் கொண்டு எழுந்து குரைஷிகளிடம் கேட்டார், "அனைவரும் கவனமாய்க் கேளுங்கள். உங்களுக்குச் சேரவேண்டிய அனைத்தையும் நான் அளித்து விட்டேன் என்று நம்புகிறேன். நான் யாருக்கும் வேறு ஏதும் தரவேண்டியது பாக்கியுள்ளதா?"
"எதுவுமில்லை. எல்லாம் சரியாக இருக்கிறது. உன்னுடைய நாணயமும் உயர்குணமும் நாங்கள் அறியாததா அபுல் ஆஸ்?"
"அப்படியானால் நான் அனைவருக்கும் அனைத்து பாக்கியையும் செலுத்திவிட்டேன். இப்பொழுது கேட்டுக் கொள்ளுங்கள். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; முஹம்மது அவனுடைய தூதர் என்று சாட்சி பகர்கிறேன்"
அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தார்கள் குரைஷிகள். "என்னது, நீயுமா?"
"ஆம் நான் மதீனாவிலேயே அவர்கள் மத்தியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் உங்களுடைய பொருட்களையும் பணத்தையும் ஏமாற்றி எடுத்துக் கொள்ளவே நான் அப்படிச் செய்தேன் என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா? அதனாலேயே திரும்பி வந்தேன். இதோ உங்கள் கணக்கைச் சீர் செய்துவிட்டேன். இனி என்னுடைய உள்ளத்தில் எந்தக் குறுகுறுப்பும் இல்லை. தெளிவான சிந்தையுடன் என் மாற்றத்தை அறிவிக்கிறேன்"
பிறர் பொருளை அபகரிக்கும் ஆசை இல்லை என்பது ஒருபுறமிருக்க, அவற்றையெல்லாம் தன்னுடன் வந்த சேவர்கள் மூலமாகவோ நம்பிக்கைக்குரிய பிறர் மூலமாகவோகூட அவர் மக்காவிற்கு அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் அதைப் பெறும் குரைஷிகள், 'கணக்கை அவர் சீர் செய்யவில்லை, ஏமாற்றிவிட்டார்' என்று அவதூறு பேசியிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி எதற்கும் இடமளிக்கக் கூடாது என்பது அபுல் ஆஸின் தீர்மானம்.
பெரும் மனதிருப்தியுடன் மதீனா பயணமானார் அபுல் ஆஸ். மனம் மகிழ்ந்து உளமாற வரவேற்றார்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ஏறக்குறைய நான்காண்டுகள் முறிந்து போயிருந்த திருமண பந்தம் புதுப்பிக்கப்பட்டது. அவரை மீண்டும் தன் மகள் ஸைனபின் கணவனாய் அறிவித்தார்கள் நபியவர்கள்.
அதன் பின்னர் தன் தோழர்களிடம் நபியவர்கள் அடிக்கடிக் குறிப்பிடுவதுண்டு, "அவர் என்னிடம் உண்மையுரைத்தார், வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றினார்"
ரலியல்லாஹு அன்ஹு!